சிதறுதா திமுக ஓட்டு? "சித்தப்பா" எடப்பாடி.. அதிமுகவின் குபீர் ஆசை.. சீமான் கையில் முடிவு.. வாவ் பாமக
சென்னை: நீண்ட காலத்துக்கு பிறகு, நிர்வாகிகளை நேரடியாக வரவழைத்து, அதிமுக மேலிடம் கலந்துரையாடி, அவர்களிடம் கருத்துக்களையும் கேட்டிருப்பது, அக்கட்சிக்கே புத்துணர்ச்சியையும், புது தெம்பையும் தந்திருக்கிறதாம். அதேசமயம், அதிமுக குறித்து ஒருசில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஏன் தோல்வி என்பது குறித்து தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. அந்தவகையில், கடந்த 10-ம் தேதியிலிருந்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

3 நாள் கூட்டம்: முதல்நாள் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 2-வது நாளான நேற்று, சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
3வது நாளான இன்று அரக்கோணம், தஞ்சை உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், தேர்தலில் தோல்வி குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்தனர். குறிப்பாக, பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று சொன்னார்களாம்.
கூட்டணி: பின்னர், வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.. அப்போது, கட்சித் தலைமை, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கேட்டதற்கு, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் கூறினார்களாம்.
ஆனால், இதுகுறித்து எடப்பாடி தரப்பில் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லையாம்.. கூட்டணி வைப்பது என்பது அந்தந்த பகுதிகளில் இருக்கும் தொண்டர்களின் கருத்த என்பதால், அதிமுக தலைமை இதுதொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கவில்லையாம்.. அதேசமயம், இந்த கூட்டத்தில், ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவின் ஆதரவாளர்களை மறுபடியும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சாத்தியமா: எனினும், இன்றைய தினம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்த பேச்சு பலமாக எழுந்திருக்கிறது. இதற்கு காரணம், அதிமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே சுமூகமான போக்கு நிலவி வருவதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஏற்கனவே, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு, அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது.. அதேபோல, நேற்றைய தினம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
எனினும், அதிமுக - நாம் தமிழர் கட்சி கூட்டணி சாத்தியமா? என்று தெரியவில்லை.. ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், இப்படியொரு கூட்டணி பேச்சு மீடியாவில் கசிந்தவாறே இருக்கும்..
திமுக கூட்டணி: இதற்கு காரணம், திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு அதிமுகவை சீமான் விமர்சிப்பதில்லை.. அதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியை "சித்தப்பா" என்று உறவுமுறை சொல்லியே அழைத்து வருகிறார்.. இதையெல்லாம் வைத்துதான், அதிமுகவின் B டீம் என்று நாம் தமிழர் கட்சியை திமுக கூட்டணியும் விமர்சித்தபடியே உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, பாஜகவை கூட்டணியிலிருந்து அதிமுக கழட்டிவிட்டதையடுத்து, நாம் தமிழர் கட்சி அதிமுக கூட்டணியில் இணையப்போவதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் செய்திகள் கசிந்தன.. அதற்கேற்றபடி, அதிமுகவிடமிருந்து தனக்கு, கூட்டணி அழைப்பு வந்ததை சீமானும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்.
நாம் தமிழர் கட்சி: அதிமுகவுக்கு மட்டுமல்ல, இப்படியொரு கூட்டணி ஆசை, நாம் தமிழர் கட்சியினருக்கே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுவதால், தொடர்ந்து கட்சிக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால், சட்டசபை, லோக்சபாவில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்போது, கட்சிக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று நாம் தமிழர் தரப்பில் நம்புகிறார்களாம்.
எனினும், சீமான் இந்த கூட்டணியை ஏற்கவில்லை. லோக்சபா தேர்தலில் "தனித்து போட்டி" என்றே அறிவித்துவிட்டார். இப்போது மீண்டும் கூட்டணி விருப்பம் அதிமுகவிலிருந்து துளிர்த்திருக்கிறது..
பாமக: திராவிட கட்சிகளுக்கு மாற்றாகவே, நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியதாக அக்கட்சியினர் சொல்லிவரும் நிலையில், இப்படியொரு கூட்டணி இனி சாத்தியமாகுமா? என்று தெரியவில்லை. ஆனால், பாமகவை இந்த முறை, அதிமுக லேசில் நழுவவிடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications