நீரிழிவு நோயாளிகள் "சிவப்பு இறைச்சி" சாப்பிடலாமா? மீண்டும் வெளியான ரிப்போர்ட்டால் பரபரப்பு.. உஷார்
சென்னை: சிவப்பு இறைச்சி குறித்த ஆய்வுகள் உலகளவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், புதிய ஆய்வறிக்கை ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கோழிக்கறி உள்ளிட்ட மற்ற இறைச்சிகளை காட்டிலும் மட்டனில், அதிக சத்துக்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.. குறிப்பாக, வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் மட்டனில் இருக்கின்றன.. அதேபோல, மற்ற இறைச்சி வகைகளோடு ஒப்பிடும்போது, ஆட்டிறைச்சியில் அதிகமாகவே இரும்புச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சிவப்பு இறைச்சி: ஆனால், சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிட்டால், மாரடைப்பு வருவற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தொடர்ந்து கூறிவருகின்றன.. காரணம், இது கெட்ட கொழுப்பை அதிகரிப்பதுடன், ரத்த உறைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தூண்டுகிறதாம். அதுமட்டுமல்லாமல், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் நிறைந்துள்ளதால், இதயத்துக்கு கெடுதலை தந்துவிடுகின்றன.
கூடுமானவரையில், செம்மறி ஆட்டைவிட, வெள்ளாட்டு கறியை தேர்வு செய்யலாம்.. காரணம், 100 கிராம் வெள்ளாட்டு கறியில் 130 கலோரியும், 3 கிராம் கொழுப்பும், 27 கிராம் புரோட்டீனும் நிறைந்துள்ளன. ஆனால், வெள்ளாட்டுக்கறியை சாப்பிட்டாலும் இதயநோய்கள் வரத்தான் செய்யும்... எனவே, வெள்ளாட்டுக்கறியே என்றாலும், நாம் சமைக்கும் பக்குவத்தில்தான், ஆரோக்கியம் அடங்கியிருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகள்: மட்டனில் நன்மைகளே இருந்தாலும்கூட, இதய நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட முடியாத நிலைமை உள்ளது.. இந்நிலையில், சிவப்பு இறைச்சி குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.. தென்கிழக்கு ஆசியா உட்பட உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளை சேர்ந்த 19 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.. "தி லான்செட் நீரிழிவு மற்றும் எண்டோகிரைனாலஜி" (The Lancet Diabetes and Endocrinology) என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகளும் வெளியாகியிருக்கின்றன.
அந்த ரிப்போர்ட்டில், ஆய்வில் பங்கேற்ற 19,66,444 பேரில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு இறைச்சியை சாப்பிட்டால், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயமும் அதிகரிக்கும் என்று நிரூபணமாகியிருக்கிறதாம்.
சிவப்பு இறைச்சி: அதாவது, 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, 100 கிராம் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சி, 100 கிராம் கோழி இறைச்சி போன்றவற்றை தினமும் சாப்பிடுவதால், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயம் முறையே 15 சதவீதம், 10 சதவீதம், 8 சதவிகிதம் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், மெக்சிகோ என பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவினரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.. உலகின் பல பகுதிகளில், மக்கள் பாதுகாப்பான அளவைவிட, அதிகமாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வதாகவும், இதனால், டைப்-2 நீரிழிவு உட்பட தொற்றாத நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது, கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது.












Click it and Unblock the Notifications