"கிளம்பறோம்".. அவங்களுக்கு பதிலடி தந்தே ஆகணும்.. எடப்பாடிக்கு சர்ப்ரைஸ் தந்த கிருஷ்ணசாமி.. சைஸா 10%
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்
சென்னை: வரும் எம்பி தேர்தலில், எடப்பாடி பழனிசாமி களமிறங்கும் சூழலில், அவருக்காக ஆதரவுகளை கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.. அந்தவகையில், புதிய தமிழகம் கட்சியும் தன்னுடைய ஆதரவை கூறி, எடப்பாடியின் கரங்களை மேலும் பலப்படுத்தி உள்ளது.
எடப்பாடி பாஜக மேலிடத்துக்கு பிடிகொடுக்காமல் உள்ளார்... தன் பிடிவாதத்தையும் தொடர்ந்து தளர்த்திக் கொள்ளாமல் உள்ளார்.. ஒருவேளை அவர் இணங்கி வராவிட்டால், அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டுவிடுவது என்ற முடிவுக்கும் பாஜக வரலாம் என்று 4, 5 மாத காலமாகவே அரசியல் விமர்சகர்களும் யூகங்களாக சொல்லி வருகிறார்கள்.
அதாவது, டிடிவி தினகரன், விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், ஜிகே வாசன், ஓபிஎஸ், சசிகலா போன்றோர்களை இணைத்து கூட்டணியாக பாஜக போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. இந்த லிஸ்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமியும் அடக்கம்.
திமுக மா.செ 'லிஸ்ட்’டில் இருப்பவர்களுக்கு தான் வேலையா? என்ன இப்படி பேசுறாரு? கொதிக்கும் கிருஷ்ணசாமி!
நிறைவு விழா
குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி திமுக அரசை டேமேஜ் செய்தும், அதிமுக மீதான தன்னுடைய இறுக்கத்தை நெருக்கமாகவும் தொடர்ந்து வைத்து வருகிறார் கிருஷ்ணசாமி.. அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி நடத்தின உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு நேரடியாகவே சென்று ஆதரவு தந்ததுடன், திமுகவை சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.. இதனிடையே, கடந்த நவம்பர் 15-ல் புதிய தமிழகம் கட்சியின் 25ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வெள்ளி விழா சிறப்பு மாநாடு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலேயே நடைபெற்றது.
போய்ட்டு வாங்க
கிட்டத்தட்ட அதிமுக மாநாடு போலவே, அந்த கூட்டம் நடந்ததாக சொல்லப்பட்டது.. காரணம், பெரும்பாலும் எடப்பாடியின் பழனிசாமியின் புகழாரம் எதிரொலித்துள்ளதாம்.. அதிலும், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர்ராஜு இருவரும் பேசியபோது, "எனக்கு வேலை இருக்கு.. நீங்க 3 பேரும் மாநாட்டுக்கு போய்வாருங்கள். என் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் கிருஷ்ணசாமிக்கு வாழ்த்து சொல்லி வாருங்கள் என்று, எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. கிருஷ்ணசாமி ஒரு சமூகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை. எல்லா சமூக மக்களின் பிரதிநிதியாக செயல்படக் கூடியவர். எல்லா சமூக மக்களையும் அரவணைத்து செல்லக் கூடியவர்.
டாக்டர் கிருஷ்ணசாமி
அதிமுகவின் ஆசிர்வாதம் முழுமையாக கிருஷ்ணசாமிக்கு உண்டு.. கிருஷ்ணசாமியின் ஆசிர்வாதமும் எங்களுக்கும் உண்டு. எடப்பாடியார் எங்களிடம் சொல்லி அனுப்பினார் கிருஷ்ணசாமிக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று. இப்போதுள்ள அரசு மாற வேண்டும். இந்த மாநாட்டில் 13 அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் என்றைக்கும் தேர்தல் நடைபெற்றாலும் மீண்டும் செயின்ட் சார்ஜ் கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்தான் முதலமைச்சர் என்று நாட்டு மக்கள் மனதில் வைத்துள்ளார்கள்" என்று பேசியிருக்கிறார்கள்.
முணுமுணுப்புகள்
வழக்கம்போல் ராஜேந்திர பாலாஜி, மோடியின் புகழை இந்த மாநாட்டிலும் பாடினாலும், எடப்பாடியின் பெருமிதத்தை அபரிமிதமாகவே கேட்க முடிந்தது என்றார்கள்.. அதுமட்டுமல்ல, அதிமுக கூட்டணியிலேயே புதிய தமிழகம் இந்த முறையும் ஐக்கியமாகும் என்றும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு கிருஷ்ணசாமி குறி வைத்திருப்பதாக தெரிவதாகவும் முணுமுணுப்புகள் வலம்வந்தன.. காரணம், செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம்... ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை டாக்டர் கிருஷ்ணசாமி குறி வைப்பதாகவும், அதற்கான முன்னோட்டமாகவே கட்சி மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்தி காட்டியதாகவும் சொல்கிறார்கள்..
கிருஷ்ணசாமி
இப்படிப்பட்ட சூழலில்தான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது அவர் பேசும்போது, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு எங்களது முழு ஆதரவினை அளிக்கின்றோம்" என்றார்.
ஓபன் டாக்
தொடர்ந்து பேசும்போது, "2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் 521 வாக்குறுதிகளை திமுக கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று குறைந்த பெருபான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. நாளுக்கு நாள் திமுகவுக்கு மக்களின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு தக்கப்பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் அது எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும். அதனால் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்ய உள்ளோம்... அதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் பணிக்குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. "முற்போக்கு" என பெயர் போடுவதால் எந்த வித்தியாசமும் கிடையாது.
சைஸா மெசேஜ்
நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம். பாஜக விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மாறுப்பட்டு போவார்கள் என்று நான் நினைக்கவில்லை. எல்லாரும் ஒத்தக்கருத்துடன் இருக்கிறோம். அதனால், எதிர்க்கட்சிகள் இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஈரோடு கிழக்கில் புதிய தமிழகம் கட்சிக்கு 10% வாக்குகள் உள்ளது" என்றார்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரத்துக்கும் கிளம்ப போவதாக கிருஷ்ணசாமி அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், தங்களுக்கான 10 சதவீத வாக்குகளையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்தியுள்ளது, அதிமுக கூட்டணியின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது..!!