இனிக்க இனிக்க சேதி வரப்போகுதா.. அடியோடு "சாயும்" கூட்டணி? எடப்பாடி பழனிசாமியை நெருங்குகிறார் "ஹீரோ"
சென்னை: மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒரு வருட காலமாகியும், இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி முடிவாகவில்லை.
பாஜகவுடன் கூட்டணியை முறித்தால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் + திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் என இரண்டையுமே தன்பக்கம் திருப்ப முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டார்.. ஆனால், ஓவைசி தவிர வேறு யாருடைய ஆதரவையும் பெரிதாக பெற முடியவில்லை.. திமுக கூட்டணியிலிருந்தும், ஒருத்தரையும் அதிமுக பக்கம் கொண்டுவர முடியவில்லை.

இது திமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறதோ இல்லையோ, தமிழக பாஜகவின் வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல, கடந்த முறை பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவந்ததால்தான், திமுகவுக்கு இணையான போட்டியை அதிமுகவால் தர முடிந்தது. ஆனால், இந்த முறை பாமக இப்போது அமைதி காத்து வருகிறது..
பாஜக பிளஸ் பாயிண்ட்: அன்புமணி ராமதாஸ், வாசன், பிரேமலதா, கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் போன்றவர்கள் அதிமுக தலைமையை விடவும், பாஜக தலைமை மீது கூடுதல் நெருக்கத்துடன் இருப்பதாக தெரிகிறது. இதுவரை அதிமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவு காட்டாமல் இருப்பதும், பாஜகவுக்கு இன்னொரு வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது.
எந்தவொரு கட்சியும், அதிமுகவுடன், இதுவரை கூட்டணியை அறிவிக்காத நிலையில், மநீம நிச்சயம் கூட்டணி வைக்கக்கூடும் என்ற சலசலப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது.
சீமான் கூட்டணி: கூட்டணிக்காக முதலில் சீமானிடம் அதிமுக பேசியதாக தெரிகிறது. ஆனால், அவர் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இதை சீமானே ஓபனாக செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டார். இதற்கு பிறகுதான், அதிமுகவின் "குறி" கமல்ஹாசன் பக்கம் திரும்பியதாக சொல்கிறார்கள்.
பாஜகவை கடுமையாக விமர்சிப்பவர்களுள் கமல்ஹாசனும் ஒருவர் என்பதால், "பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் உறுதியாக உள்ளார். அதனால்தான், திமுக கூட்டணியில், காங்கிரஸ் தயவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தசூழலில், திடீரென, கமலின் மீது அதிமுகவின் கவனமும் திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி: 1+1 சீட்களை ஒதுக்கி, தேர்தல் செலவையும் கட்சியே ஏற்றுக்கொள்ளும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.. ஆனால், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து இத்தனை நாளாகியும்கூட, மய்யத்திலிருந்தும் பச்சைக்கொடி காட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இன்றுகூட, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராஜலட்சுமி அம்மையார் மய்யம் தொழிற்சங்கமும், மய்யம் திருப்பூர் பனியன் தொழிற்சங்கமும், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையில் இணைந்தது.
கமல் வேண்டுகோள்: கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, "மக்கள் நீதி மையத்தின் நம்மவர் தொழிற்சங்க பேரவையை வலுப்படுத்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் நம்மவர் தொழிற்சங்கங்களை தொடங்கி கட்சியை பலப்படுத்துங்கள். எம்பி தேர்தல் வருவதால், அடுத்த 6 மாதத்துக்குள் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும்" என்றாராம்.
ஆனாலும், யாருடன் கூட்டணி என்பது குறித்த எந்தவிதமான சமிக்ஞையும் கூட்டத்தில் வெளியிடப்படவில்லையாம். யாருடன் கூட்டணி என்பது தெரியாமலேயே பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் குழம்பியிருப்பதை போலவே, மய்யத்திலும் இப்படி ஒரு குழப்பம் நிலவி வருகிறதாம்.
கோவை மகேந்திரன்: எனினும், 1 சீட் மட்டும் தரப்படுமானால், திமுகவுடன் கூட்டணி வைப்பது மய்யத்துக்கு சந்தேகம்தானாம்.. போதாக்குறைக்கு கோவை மகேந்திரன், இன்று திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால், கமல் திமுகவுடன் கூட்டணி வைப்பாரா? அப்படியே கூட்டணி வைத்து கோவையில் போட்டியிடுகிறார் என்றாலும், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் இறங்கி கமலுக்காக வேலை பார்ப்பார்களா? என்றெல்லாம் சந்தேகம்தான்.
அந்தவகையில், கமல் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? யாருடன் சேர்ந்து பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை அறுவடை செய்ய போகிறார்? என்கிற சந்தேகங்கள் அரசியல் களத்தில் தொடர்ந்து வலுத்து வருகிறதாம்..!!












Click it and Unblock the Notifications