சீமானும் "சாய்கிறாரா".. இஞ்ச் கூட மாறலயே.. பாஜக ஓட்டெல்லாம் "அங்கிட்டு" போயிருமோ.. திமுக சுதாரிக்கணுமே
சென்னை: மெகா கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது.. இன்னும் அதற்கான அறிகுறியே தென்படாத நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறது?
இப்போதைக்கு திமுக கூட்டணி மட்டுமே பலமாக உள்ள நிலையில், மற்ற கட்சிகள் கூட்டணி பேச்சை நடத்தி வருவதாகவே தெரிகிறது. இதில், பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டும்கூட, பெரிய அளவு பலன்கள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்கிறார்கள்..

முயற்சிகள்: திமுக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர அதிமுக முன்னெடுத்த முயற்சிகள் அத்தனையும் தோல்வியை சந்தித்துவிட்டது.. எனினும், திமுகவுக்கு இணையான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம், ஜிகேவாசன், ஜான்பாண்டியன் போன்றோருடன் நல்ல இணக்கமான போக்கை அதிமுக கொண்டிருந்தாலும், திமுகவின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப, பெரிய கட்சிகளின் தயவும் அதிமுகவுக்கு தேவையாக இருக்கிறது.. அதனால்தான், பாமகவிடம் பேச்சு நடப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.
பாமக கூட்டணி: ஆனால், ஒரு சில நிபந்தனைகள் காரணமாக, அதிமுகவுடன் கூட்டணி முடிவாகவில்லை என்கிறார்கள். ஒருவேளை பாமக, பாஜக பக்கம் தாவினால், விசிகவை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியும் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
அதேபோல, திமுக கூட்டணியை சாராத கட்சிகள் + பாஜக எதிர்ப்புடைய கட்சிகளுக்கு அதிமுக தூண்டில் வீசிவருகிறதாம். அந்தவகையில், சீமானிடம் ஏற்கனவே பேசியதாக தெரிகிறது. ஆனால், அவர் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இதை சீமானே ஓபனாக செய்தியாளர்களிடம் அன்று சொல்லியிருந்தார்.
சீமான்: "அதிமுகவுக்கு பாஜக ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ், அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்கிறோம்" என்று அன்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறியிருந்த நிலையில், மீண்டும் அவரை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர தற்போது கையிலெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்கு காரணம், சீமானை கூட்டுக்குள் கொண்டுவந்தால், தன்னுடைய பிரச்சாரங்களில் பாஜகவை கடுமையாக விமர்சிப்பார், இதனால், சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் அதிமுகவுக்கு உயரும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறதாம்.
ஆனால், அதிமுக கூட்டணிக்குள் வர சீமான் தயங்குவதாக தெரிகிறது.. காரணம், திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளையுமே சீமான் விமர்சித்து வருவதால்தான், இந்த 3 கட்சிகளின் அதிருப்தி வாக்குகளை நாம் தமிழர் கட்சியால் பெற முடிகிறது.. மேலும் தனித்து போட்டியிட்டு வருவதால், ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், வாக்கு வங்கியும் கணிசமாக உயர்ந்து வருவதை, அதிமுக கவனிக்காமல் இல்லை.
எடப்பாடி பழனிசாமி: ஆனால், கூட்டணி வைத்து போட்டியிட்டால், நாம் தமிழர் வாக்கு வங்கியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். இந்த தயக்கம் காரணமாகவே சீமான், கூட்டணி வைக்க யோசிக்கிறாராம். இதை எடப்பாடியும் உணராமல் இல்லை. ஆனால், மெகா கூட்டணி என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டுமானால், தமிழகத்தில் 3வது இடத்தை பிடித்திருக்கும் நாம் தமிழர் கட்சி போன்ற பெரிய கட்சியின் தயவும் தேவை என்று நினைக்கிறாராம்.
அதுமட்டுமல்ல, நாம் தமிழர் + அதிமுக இணைந்தால், சிறுபான்மையினர் ஓட்டுக்களுடன் சேர்த்து, பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்களையும் பிரதானமாக பெற முடியும் என்றும் கணக்கு போடுகிறாராம்.. ஒருவேளை அப்படி நடந்தால், திமுக இதை எதிர்கொள்ளும்? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
மாநாடு: 'செல்லுமிடமெல்லாம் பாஜகவை விமர்சிக்கும்படியும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் மறக்காமல் சொல்லுங்கள் என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி. மேலும், சிறுபான்மையினரையும் அதிமுக பக்கம் இழுத்து வரும்படியும் அசைன்மென்ட் தந்துள்ளாராம்.
ஆனால், நேற்று நடந்த கிறிஸ்தவ விழாவில், பாஜகவை எதிர்த்தும், விமர்சித்தும் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம்.. வழக்கம்போல் திமுகவை சாடியதே தவிர, பாஜகவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தான் மட்டும் பாஜகவை விமர்சிக்காமல் இருக்கிறாரே ஏன்? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது, பரபரப்பான விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications