'அது' இல்லை... அதனால ரெப்கோ பேங்கை.. ஒரு வங்கியாகவே கருத முடியாது.. உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து
சென்னை: ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ பேங்க்கை வங்கியாகவே கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காகக் கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ரெப்கோ வங்கி. இதில் சென்னை வியாசார்பாடியை சேர்ந்த பர்மா அகதி கணேசன் என்பவர் கடன் பெற்றிருந்தார்.
வங்கியில் பெற்ற கடனை அவர் முறையாகச் செலுத்தாததையடுத்து, கணேசனுக்கு சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்த ரெப்கோ வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக்காக அங்கீகாரம் பெற ரிசர்வ் வங்கியிடம் ரெப்கோ பேங்க் கொடுத்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் உரிமம் பெற்ற வங்கிகளைப் போல ரெப்கோ வங்கி செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என தெரிவித்தர். மேலும், மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.