முக்குலத்தோர் ஓட்டெல்லாம் உடையுதா? மொத்தமாக வளைக்கிறதா அதிமுக? தொடங்கியதுமே சறுக்கிய சசிகலா?
சென்னை: விகே சசிகலாவின் அரசியல் வேகம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்மண்டலத்தில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. அதேசமயம், அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த சில காலமாகவே இணக்கமின்றி காணப்பட்ட சசிகலா குடும்பம் தற்போது ஒன்றுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.. சசிகலாவுடன் தினகரன் மற்றும் திவாகரன் குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சமாளிக்க வேண்டுமானால், முதலில் குடும்ப ரீதியான ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்தே, தினகரனை சரிக்கட்டும் வேலையில் திவாகரன் இறங்கினாராம். இதற்கு பிறகே, சசிகலாவின் அரசியலில் 2வது இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருக்கிறதாம்.

பயண திட்டம்: தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பதற்காக, சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சசிகலா. இந்த பயணத்திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டு தந்ததே திவாகரன் தானாம்..
இந்நிலையில், தேர்தலில் தொடர் தோல்விகள், வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் வியூகம் போன்றவை குறித்தெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடியிடம் பேசும்போது, தென்மண்டலத்தில் முக்குலத்தோர் ஆதரவு தேவையானால், சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தினார்களாம்.
ஓபிஎஸ்: அதற்கு எடப்பாடி பழனிசாமி, கட்சியை சீரழிக்கும் எண்ணம் கொண்ட ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் இடமில்லை, சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று சொன்னாராம்.
இந்த தகவல்தான் இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே தீயாக பரவியது.. ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி, பொய்த்தகவல் என்று உடனடியாக மறுத்திருக்கிறது அதிமுக மேலிடம்..
நிலைப்பாடு : "கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ளுவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று மட்டுமே எடப்பாடி வலியுறுத்தினாராம்.. அதுமட்டுமல்ல, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை கட்சிக்குள் இணைக்கும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளதாம்.
இதைத்தான் இன்றைய தினம், மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமாரும் தெரிவித்திருக்கிறாராம்.. அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கருவாடு மீன்: இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோன்றது. அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தான் சார்ந்த சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை.
சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா? தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக 2-ம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலாதான் காரணம்.
உள்ளடி வேலைகள்: உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக ஆட்சியை வழிநடத்தியதாகக் கூறிக்கொள்ளும் சசிகலா அவர் சார்ந்த சமூகத்தினருக்கு செய்த நன்மை என்ன?.
தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா? சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம். அதிமுகவினர் தற்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
அப்செட்: அதிமுகவின் இந்த அறிவிப்பானது, சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.. தென்மண்டல சுற்றுப்பயணத்தில் ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் திரட்டி, பலத்தை காட்டலாம் என்றும், இதை வைத்தே எடப்பாடி பழனிசாமி தரப்பை அணுக அடித்தளம் அமைக்கலாம் என்றும் சசிகலா தரப்பினர் கணக்கு போட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் தொடர்வது, மன்னார்குடி வட்டாரத்தையே மீண்டும் அப்செட்டாக்கி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications