ஆட்டம் ஆரம்பம்.. பாஜகவின் "டபுள் அசைன்மென்ட்".. திமுக சமாளிக்குமா?.. ஆளுநர் மாளிகையும் சர்ச்சையும்
ஆளுநர் மாளிகையில் அரசியலை பேசியது ஏன் என்ற கேள்வி வட்டமடித்து வருகிறது
சென்னை: இதுவரை இல்லாத நிகழ்வுகள் அனைத்தும், கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெடித்து வருகின்றன.. இதையொட்டி ஆளுநரை, ரஜினி சந்தித்த விவகாரமும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது... பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன...
அதாவது, ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாகவே மாறி வருகிறது என்று கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே சொல்லி வருகின்றன..
பத்திரிகையாளர்களிடம் போட்டுடைத்த ரஜினி.. ஆளுநர் ரவிக்கு நெருக்கடி! பாய்ண்டை பிடித்த மார்க்சிஸ்ட்
புறக்கணிப்பு
இதன் எதிரொலியாகத்தான், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விசிக குரல் அன்றே எழுப்பியது.. ஒரு மாநில ஆளுநரின் தேநீர் விருந்தையே புறக்கணிக்கும் அளவுக்கு, ஆளுநர் மீது அதிருப்திகள், தமிழக கட்சிகளுக்கு பெருகி உள்ளன.. அதுமட்டுமல்லாமல் ஆளுநர் ரவியின் பேச்சுக்கள், சர்ச்சைகளை உருவாக்கியும் வருகின்றன..
சனாதனம்
சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்பன உட்பட பல்வேறு இந்துத்துவா சார்ந்த கருத்துக்களை ஆளுநர் பதிவு செய்து கொண்டே வந்தால், எதிர்க்கட்சிகள் இவைகளையும் விமர்சித்து கொண்டே வருகின்றன.."ஆளுநர் ஆர்என்ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுகிறார், சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்" என்று திருமாவளவன் ஒருமுறை காட்டமாக கூறியிருந்தார்.
நைட் தங்கினார்
அதேபோல, ஆளுநரின் பேச்சு மட்டுமல்லாமல், ஆளுநர் மாளிகை குறித்தும் எதிர்க்கட்சிகள் வேதனைகளை தெரிவித்து வருகின்றன.. சில தினங்களுக்கு முன்பு, செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார்.. அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்... காரணம், மறுநாள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால், ஆளுநர் மாளிகையிலேயே தங்கவிட்டார்..
மிஸ் யூஸ்
அன்றிரவு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக நிர்வாகிகள் பிரதமர் மோடியை ஆளுநர் மாளிகையிலேயே சந்தித்தனர்... கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேலாக அந்த ஆலோசனை கூட்டம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன.. இதைதான் விசிக அன்றே கேள்வி எழுப்பியது.. "ஆளுநர் மாளிகையில் ஆளுநரோடனோ அல்லது மாநில வளர்ச்சி குறித்து முதல்வருனடோ ஆலோசனை நடத்தலாம். ஆனால், பாஜக கட்சியினரோடு ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது அதிகாரமீறல் ஆகாதா? இதற்குமுன் எந்த பிரதமராவது தனது கட்சியினரோடு ஆளுநர் மாளிகையை மிஸ் யூஸ் செய்திருக்கிறார்களா?" என்று வன்னியரசு கேள்வி எழுப்பினார். .
எஸ்கேப்
அதாவது, ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கியது அதிகாரப்பூர்வமாக மாநில அரசு செய்ய வேண்டிய கடமை.. ஆனால், பாஜக தரப்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், இதுகுறித்து பாஜக அல்லது ஆளுநர் தரப்பில் எந்தவிதமான விளக்கமும் தரப்படவில்லை.. இந்நிலையில், நேற்றைய தினம் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போதும், "ஆமா.. நாங்கள் அரசியல் பற்றி பேசினோம்.. ஆனால், அது என்ன என்பதை வெளியே சொல்ல முடியாது" என்றார்..
ஓபன் டாக்
பொதுவாக, யாராவது ஒரு பிரமுகர், கட்சி தலைவர்களை சந்தித்துவிட்டு பேட்டி தந்தால், "மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று சொல்லி நழுவிவிடுவார்கள்.. ஆனால், அரசியல் பேசினோம் என்று ரஜினி வெளிப்படையாகவே சொன்னது பாராட்டத்தக்கதே.. அதேசமயம், ஆளுநர் மாளிகையில் இப்படி அரசியல் பேசலாமா? ஆளுநர் மாளிகை என்பது மாநிலம் சார்ந்த பொதுவான இடமல்லவா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நெருப்பு
இதற்கான கேள்வியை கேட்டு, மீண்டும் அதே நெருப்பை பற்ற வைத்துள்ளார் சிபிஎம் பாலகிருஷ்ணன்.. "ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல... ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது? இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது?
வரம்பு மீறீல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது.இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்" என்று ட்வீட் போட்டு கண்டித்துள்ளார்.
பாலகிருஷ்ணன்
தமிழக மக்களின் ஆன்மீக உணர்வை ஆளுநர் மதிக்கிறார் என்று ரஜினி தந்த பேட்டியும், "தமிழக அரசுக்கு மாற்றாக ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றப்பட்டு வருகிறது" என்று பாலகிருஷ்ணன் சொல்லி உள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது:
பிளான் என்ன?
"நேற்றைய தினம் ரஜினி பேசியது முழுக்க முழுக்க திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான கருத்துக்கள்தான்.. இந்த முறை ஆட்சி அமைத்ததில் இருந்தே, திராவிட அரசியலை திமுக முன்னெடுத்து வரும்போது, ஆன்மீக அரசியல் சார்ந்த வார்த்தைகளையே ரஜினி வேண்டுமென்றே உதிர்த்துவிட்டு போயுள்ளார்.. மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் செய்ததை போலவே, பாஜக தமிழகத்திலும் பிளான் செய்வதாகவே தெரிகிறது, தமிழ்நாட்டுக்கு எதையும் செய்ய ஆளுநர் தயாராக இருக்கிறார் என்கிறாரே ரஜினி, அப்படியானால், நீட் பற்றியும், ஜிஎஸ்டி பற்றியும் ஆளுநர் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்? எதற்காக ஜிஎஸ்டி பற்றி கேட்டால் ரஜினி வாய் திறக்கவில்லை?
அசைன்மென்ட்
மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசிவிடக்கூடாது என்பதில் மட்டும், அன்று முதல் இப்போதுவரை ரஜினி கவனமாக இருக்கிறாரே ஏன்? பாஜகவின் கொள்கை சார்ந்த சித்தாந்தங்களை, ஆளுநர் தரப்பு முன்னெடுத்து வரும் வேளையில், அதற்கு கூடுதல் வலு சேர்ப்பதே, ரஜினிக்கு தரப்பட்ட முதல் அசைன்மென்ட் போலும்.. அடுத்ததாக, ஆளுநர் மீதான அதிருப்தியை மக்களிடம் போக்கி, நன்மதிப்பை ஏற்படுத்துவது அடுத்த அசைன்மென்ட்.. மொத்தத்தில் திமுகவை குறி பார்த்துதான், ரஜினியை களமிறக்கி உள்ளதாக தெரிகிறது.. ஆனால், இதனால் திமுகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.. அதேசமயம், அரசியல் பேச்சுக்காக ஆளுநர் மாளிகையை யார் பயன்படுத்தினாலும் அது தவறுதான்" என்று சொல்லி முடித்து கொண்டனர்.