எடப்பாடியார் சரவெடி.. கொரோனா காலத்தில் பதிவான 10 லட்சம் கேஸ்கள் ரத்து! சிஏஏ போராட்ட வழக்குகள் வாபஸ்
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஊரடங்கை மீறியதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கொரோனா காலத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக தமிழகத்தில் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் பொது முடக்கத்தின் போது, பொது மக்கள் மீதும் போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டார்.

கொரோனா காலகட்டத்தில் இருந்து நெருக்கடியான காலகட்டத்திலும் அதிமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2,500 வழங்கியது. அதோடு 5 மாதங்கள் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் தான் இது நடந்தது.
நெருக்கடியான நேரத்திலும் தேர்தலை பார்க்காமல் மக்களையே பார்த்தது. 55,000 பேருக்கு பட்டா கொடுத்திருக்கிறோம் என்று கூறினார். மருத்துவக் காப்பீடு திட்டத்தின் தொகையை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். 2000 மினி கிளினிக் கொண்டு வந்து சாதனை படைத்தது தமிழக அரசு.
1100 புகார் எண்ணில் இதுவரை 60 ஆயிரம் புகார்கள் வந்த நிலையில், 1100 உதவி மையம் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த பூமி உள்ளவரை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இ-பாஸ் முறைகேடு காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. சில வழக்குகள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்வது பற்றி பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக தெரிவித்தார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதால் சில வழக்குகளை தவிர 1,500 வழக்குகள் ரத்தாக உள்ளன. இதேபோல கொரோனா காலத்தில் பதியப்பட்ட 10 லட்சம் வழக்குகளும் ரத்தாக உள்ளன. இன்றைய தினம் அடுத்தடுத்து அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் எடப்பாடியார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications