சென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு
சென்னை: சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீடீரென தீப்பிடித்து எரிந்ததால் புகை மண்டலமாக மாறியது.
இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீ பற்றி எரிந்த கார் அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு சொந்தமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கோட்டையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இங்கு தான் முதல்வரின் அலுவலகம் அமைந்துள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்களின் தலைமை நிலையங்கள் இங்கு தான் அமைந்துள்ளது.

அதிகாரிகள்
அனைத்து துறை அமைச்சர்களின் அலுவலகங்களும் இயங்குகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதி தான் தலைமைச் செயலகம் ஆகும்.

காரில் தீ
இந்நிலையில் தலைமை செயலகத்தின் புனித ஜார்ஜ் கோட்டையின் பின்பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த காரில் திடீரென புகை வந்தது. அதன் பின்னர் கார் மளமள தீப்பற்றி எரிய தொடங்கியதால் புகை மூட்டமாக அந்த பகுதி மாறியது.

விரைந்து வந்தனர்
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையின்ர் விரைந்து வந்து பற்றி எரிந்த காரில் தீயை அணைத்தனர். புகை மூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் எரிந்து சேதமானது.

நாசவேலையா
காரில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அந்த கார் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கார் என தெரியவந்துள்ளது. ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் ஒரு சதிவேலையா அல்லது காரில் ஏற்பட்ட பழுது காரணமா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். இந்த சம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications