ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில்! எக்ஸிட் போல் முடிவால் திடீர் வியூகம் மாற்றமா?
சென்னை: தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு கால தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் மே 4 முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமே டென்ஷனில் காத்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் வாக்காளர்களின் கவனத்தை வெகுவாக பெற்றுள்ளது.. ஆளுங்கட்சியின் பிடிமானம், எதிர்க்கட்சியின் அமைதியான முன்னேற்றம், மற்றும் ஒரு புதிய சக்தியின் விஸ்வரூபம் என கணிப்புகள் காட்டும் இந்த முரண்பட்ட முடிவுகள்தான், நம்முடைய அரசியல் தலைவர்களின் தூக்கத்தைக் கலைத்துள்ளன.
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் களம், வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்தத் தருணத்தில், இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பை எட்டியுள்ளது.

இதுவரை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள், அரசியல் களத்தில் ஒரு தெளிவை தந்துவிட்டு போகும்.. ஆனால், நேற்றைய எக்ஸிட் போல்கள், முன்னெப்போதும் இல்லாத ஒரு பெரும் குழப்பத்தையே தற்போது ஏற்படுத்தி உள்ளன...
தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் அதாவது Exit Polls நேற்று வெளியான நிலையில், அவை ஒவ்வொன்றும் ஒரு திசையைக் காட்டுவது அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பத்தையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது... காலம் காலமாக நிலவி வந்த இருமுனை போட்டி, இப்போது பலமுனை போட்டியாக உருவெடுத்துள்ளதை இந்தக் கணிப்புகள் உறுதி செய்கின்றன.
கணிப்புகளின் நம்பகத்தன்மை என்ன?
வாக்குக் கணிப்புகள் என்பது எப்போதும் ஒரு துல்லியமான அளவுகோலாக இருந்ததில்லை. கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் கூட, பல நிறுவனங்களின் கணிப்புகள் உண்மையான முடிவுகளுக்கு நேர்மாறாக அமைந்த வரலாறும் உண்டு.
அந்த அனுபவத்தைக் கொண்டே பல அரசியல் தலைவர்கள், இப்போதைய எண்களை கண்டு பதற்றமடையாமல் உள்ளனர்.. அதுமட்டுமல்ல, மக்கள் எங்களுக்காக போட்ட ஓட்டுகளும், உண்மையான தீர்ப்பும் வாக்குப் பெட்டிக்குள் பத்திரமாக இருக்கிறது என்பதே அவர்களின் நம்பிக்கையாக இப்போதும் உள்ளது.
இருந்தாலும், இந்த முறை கணிப்புகளில் நிலவும் அதீத முரண்பாடுகள் அரசியல் ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன... எப்படி தெரியுமா?
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் வாக்கு வங்கி அப்படியே இருக்கிறதா அல்லது சிதறியுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் சில பகுதிகளில் வாக்குகளைப் பிரிப்பது யாருக்குப் பாதிப்பு என்பதை இந்தக் கணிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக, வட தமிழகத்தில் பாமகவின் தாக்கம் மற்றும் தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய ரீதியிலான வாக்குப்பதிவு ஆகியவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. மேற்கு மண்டலம் எப்போதும் போல அதிமுகவின் கோட்டையாக இருக்குமா அல்லது அங்கும் சரிவு ஏற்படுமா என்பதில் கணிப்புகள் மாறுபடுகின்றன.
பெண்கள் + புதிய வாக்காளர்களின் ஆதிக்கம்
இந்தத் தேர்தலின் போக்கை மாற்றியமைக்கப் போவது பெண்கள் வாக்குகளும், 1.5 கோடிக்கும் அதிகமான முதல்முறை வாக்காளர்களும்தான். ஆளுங்கட்சியின் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் பெண்களைக் கவர்ந்துள்ளதா, அல்லது மாற்றத்தை விரும்பி முதல்முறை வாக்காளர்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பக்கம் சாய்ந்துள்ளனரா என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி.
குறிப்பாக, இளைய தலைமுறையினர் பழைய அரசியல் முறைகளை நிராகரித்து, ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர்ந்திருப்பதாக சில கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசிய கட்சிகளின் தாக்கம்
பாஜக மற்றும் காங்கிரஸின் பங்கு இந்த தேர்தலில் பெரிய அளவில் பேசப்படாததையும் இங்கு நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.. ஆனால், குறிப்பிட்ட சில தொகுதிகளில் இவர்களின் வாக்கு வங்கி வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை..
குறிப்பாக பாஜகவின் தனித்துப் போட்டியிடும் முயற்சி அல்லது கூட்டணி பலம், சில முக்கியத் தொகுதிகளில் திராவிடக் கட்சிகளின் வெற்றியை தட்டிப் பறிக்கலாம் அல்லது வாக்குகளை பிரித்து மற்றவர்களுக்குச் சாதகமாக அமையலாம்.
ஸ்டாலின் அவசர ஆலோசனை
நேற்று வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததைத் தொடர்ந்து, சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சில கணிப்புகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவும், சில கணிப்புகள் புதிய சக்திகளின் வரவால் வாக்குகள் சிதறுவதாகவும் காட்டுகின்றன. இந்தத் தரவுகளின் அடிப்படையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சரியாகப் பதிவாகியுள்ளனவா என்பது குறித்து இந்த ஆலோசனையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இப்படி ஏகப்பட்ட குழப்பங்களை நேற்றைய எக்ஸிட்போல் தந்துள்ளதுடன், பல ரயில்வாதிகளின் தூக்கத்தையும் கலைத்து விட்டு சென்றுள்ளது.. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் போதுதான் அறிய முடியும். அதுவரை தமிழக அரசியல் களம் இந்த எக்ஸிட் போல் கணிப்புகள் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications