பாஜக கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கு.. 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
மூன்று மாதத்திற்குள் கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள வழக்கை மூன்று மாதத்தில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கல்யாணராமன் தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் இவர் அவதூறாக பேசி வந்த நிலையில், கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கல்யாணராமனை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், நீதிமன்றத்தில் இனி வெறுப்புடன் பேச மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்து விட்டு மீண்டும் அதே போன்று பேசுவதாக சுட்டிக்காட்டப்பட்டது, தொடர்ந்து கல்யாணராமன் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை, அவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், மத மோதலை உருவாக்கும் விதமாக அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது, இந்நிலையில் அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது சரிதான், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்த மனுதாரர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார் என்றால் கல்யாணராமன் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிநாத் தாக்கல் செய்துள்ள மனுவில் அவருக்கு எதிராக தான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவரை கைது செய்ததாதகவும், பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.. பின்னர் விடுவிக்கப்பட்ட கல்யாணராமன், அவதூறாக பேசமாட்டேன் என்ற நீதிமன்றத்தில் அளித்த நிபந்தனை வாக்குறுதியை மீறி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக சுட்டிகாட்டியுள்ளார்.
எனவே கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் ,மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மூன்று மாதத்திற்குள் கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.