மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு..உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனு கோரிக்கையை ஏற்று விசாரணை நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைக்க இம்மாத இறுதிவரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. அத்துடன், மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நவம்பர் 28ஆம் தேதி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நுகர்வோரிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து மின்வாரியம் தனது சர்வரின் திறனை அதிகரித்துள்ளது. ஒரே சமயத்தில் பலர் ஆதாரை இணைக்க முற்படும்போது ஒருசில நேரங்களில் சர்வர் இணைப்பு துண்டிக்கப்படும். ஒருமுறை சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சித்தால் இணைப்பு கிடைக்கும்.
மேலும், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்த முடியும். எனவே, ஆன்லைனில் பணம் கட்டுவோர் முதலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முன்னர், ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது. தற்போது அது தேவையில்லை'' என்றனர்.
குவியும் வடமாநிலத்தவரால் பேராபத்துகள்! தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடா? மீண்டும் எழும் முழக்கம்!
இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் புதிய இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. அதன்படி, https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம். மின் இணைப்பு ஆதார் எண் இணைப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தடை செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.