வளைகுடா தமிழர்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க கோரிய வழக்கு.. ஹைகோர்ட் புதிய முடிவு
சென்னை: வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை திமுக வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அந்த வழக்கில் துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப முடியாமல் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அந்தந்த நாடுகளில் அவர்களுக்கு உரிய வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அந்த வழக்கோடு சேர்த்து வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications