சென்னையில் ED அதிகாரிகள் மீது வழக்கு பதிவு! எம்எல்ஏக்கள் விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் உள்ள ஐ பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில்குமாரின் அறையில் சோதனை நடத்துவதற்காக இன்று காலையில் இருந்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் வளாகத்தில் காத்திருந்தனர். இந்த நிலையில் தான் அனுமதி இன்றி வளாகத்திற்குள் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான சென்னை, திண்டுக்கலில் உள்ள வீடு மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், திமுகவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

ஐ பெரியசாமி வீட்டில் ரெய்டு
அவரது மகனும் எம்.எல்.ஏவுமான செந்தில் குமார் வீடு மற்றும் ஐ பெரியசாமியின் மகள் இந்திராணியின் வீடு என 6-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையை பொறுத்தமட்டில் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கான விடுதி வளாகத்தில் பழனி தொகுதி எம்.எல்.ஏ செந்தில் குமாரின் அறையில் சோதனை நடத்துவதற்காக 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் அறை பூட்டப்பட்டு இருந்ததால் காலையில் இருந்தே அறைக்கு வெளியேவே காத்திருந்தனர். அவர்கள் சட்டசபை செயலாளர் மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதி வளாக அதிகாரியிடம் அனுமதி பெறுவதற்காக 4 மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் காத்திருந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு
இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி எம்.எல்.ஏ விடுதி அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததாக திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சட்டத்துறை செயலாளர் சீனிவாசன் இந்த புகாரை கொடுத்தார். இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனை ஏன்?
ஐ பெரியசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் ஐ பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
வரும் 18 ஆம் தேதி விசாரணை
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், ஐ பெரியசாமி மற்றும் குடும்பத்தினரை விடுவித்தது செல்லாது என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ பெரியசாமி மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு வரும் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த சுழலில் தான் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications