தேர்தல் நெருங்குவதால் தீவிரமடையும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. 2,185 பேர் மீது பாய்ந்தது வழக்கு!
சென்னை: "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 14ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 2,185 இடைநிலை ஆசிரியர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்த விளைவித்தல், சென்னை மாநகர காவல் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் விரைந்து தங்கள் கோரிக்கை தீர்க்கப்பட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி செய்யாத நாட்களுக்குச் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், "சுமார் 5,000 ஆசிரியர்கள் சென்னையில் திரள்வதை முடக்கவே இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதுபோன்ற மிரட்டல்களை எதிர்பார்த்தே நாங்கள் களத்தில் நிற்கிறோம். அசையாத அரசாங்கத்தை அசைத்துப் பார்ப்போம்; வெற்றி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் ஓயாது" என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசார், கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் எழும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் 2,185 இடைநிலை ஆசிரியர்கள் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications