எல்லாம் நாடக அரசியல்.. ஆர்எஸ்எஸ் தலைவரா இருந்துகிட்டு இப்படி பேசுறீங்களே? விளாசிய திருமாவளவன்!
சென்னை: நாடு முழுவதும் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் சாதி குறித்து சமீபத்தில் பேசியிருந்தது பெரும் அரசியல் கவனிப்பை பெற்றிருந்தது.
சாதிகள் என்பது மதத்தின் உட்பிரிவுகள் என்றும், தீண்டாமை வன்கொடுமை சாதியின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்பதால் சாதியை ஒழிக்க வேண்டுமெனில் அதன் வேராக இருக்கும் மதத்தை ஒழிக்க வேண்டும் என இந்தியாவில் பல சீர்திருத்தவாதிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் சாதி குறித்து மோகன் பகவத் பேசிய கருத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வர்ணாசிரமம்
இந்தியாவில் வர்ணாசிரம கோட்பாடு இன்று வரை மறைமுகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றும், ஆண்டு தோறும் அதிகரிக்கும் சாதிய வன்கொடுமை வழக்குகள்தான் இதற்கு உதாரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே வேளையில் இந்த வர்ணாசிரம அமைப்பு சாதிக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. சாதிக்கு முக்கிய காரணியாக வர்ணாசிரமம் எப்படி இருக்கிறதோ, இதற்கு மதம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அழிக்க வேண்டியவை
சாதி குறித்த பார்வைகள் இவ்வாறு இருக்க, தீவிர வலதுசாரி அமைப்பான மோகன் பகவத் சமீபத்தில், "சாதியும் வர்ணமும் இறந்த விவகாரங்கள். அவற்றை மறந்துவிட்டு செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல்கட்சிகளும் தங்களது எதிர் கருத்துக்களை பதிவு செய்துள்ளன. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறுகையில், "சாதி மறக்கப்பட வேண்டியது அல்ல. அழிக்கப்பட வேண்டியது" என்று கூறியுள்ளார்.

நாடக அரசியல்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ராஷ்ட்ரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு.மோகன் பகவத் அவர்கள், "சாதி, வர்ணம் என்பவையெல்லாம் இறந்தகால விவகாரங்கள் என்றும்; அவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வோமென்றும்" அண்மையில் கூறியிருக்கிறார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறெதுமில்லை என்பதாக உள்ளது.

மாய தோற்றம்
இந்திய சமூகம் அல்லது இந்து சமூகம், சாதி, வர்ணம் ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு இயங்கவே முடியாது. அந்த அளவுக்கு அவையிரண்டும் இந்தச் சமூகத்தின் அடி முதல் நுனி வரையில் விரவிப் பரவி அதன் உயிரியக்கமாகவே விளங்குகின்றன. ஆனால், நடைமுறை வாழ்வில் இன்றும் வலுவாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்காலப் பேருண்மையைக் "கடந்தகால விவகாரங்கள்" எனவும் அவற்றை மறக்கும்படியும் திரு. மோகன் பகவத் அவர்கள் கூறுகிறார். முழுபூசணியைச் சோற்றில் மூடி மறைக்கும் உலகமகா கில்லாடியாக இருக்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஏதோ இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிப் பேசுவதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைகிறார்.

உயர்வு தாழ்வு
வர்ணாஸ்ரமம் இச்சமூகத்தின் ஆணிவேராகவும் சாதிகள் அதன் பக்கவேர்களாகவும் குலம் கோத்ரம் போன்றவை அவற்றின் சல்லிவேர்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.பிறப்பின் அடிப்படையிலான உயர்வு- தாழ்வு என்னும் பாகுபாடும் அதனடிப்படையிலான வாழ்க்கைமுறையும்தான் இந்துச் சமூகத்தின் உயிர்நாடியாகவே அமைந்துள்ளது.

பாகுபாடு
ஆண்- பெண் என்னும் இயல்பான வேறுபாட்டில் சரிபாதி மேலிருந்து கீழாக பாலின பாகுபாடு என்பது இங்கே நிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆண் பெண்ணைவிடவும் பிறப்பினாலேயே உயர்வான தகுதியுடையவன் என்னும் பாகுபாடு கும்பம், சமூகம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நியாயப்படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலாதிக்கம்
பாலின பாகுபாடு மேலிருந்துகீழாக (vertically) நிலை கொண்டுள்ளதென்றால், வர்ணாஸ்ரம பாகுபாடு பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் அடுக்குகள் இச்சமூகத்தின் இடம்-வலமாகவும் (horizontally ); அதேவேளையில், மேல்-கீழாகவும் நிறுவப்பட்டுள்ளது. இது பல ஆயிரம் தலைமுறைகளாக்க் கெட்டித் தட்டி இறுகிக்கிடக்கிறது. இதுவே, இச்சமூகத்தின் உழைப்பையும் உற்பத்தி முறையையும் அதிகாரம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றையும் தீர்மானிக்கிற குலத்தொழிலாக வரையறுக்கிறது. இதனால், ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சார்ந்த சாதிகள்தான் நிலையான பாதுகாப்பையும் பெரும்பயன்களையும் பெற்று அரசியல், சமூகம், கலை, இலக்கியம் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இன்றும் மேலாதிக்கத்தைச் செய்துவருகின்றன.

அணித்திரள்வோம்
அத்தகைய பெருவாய்ப்பைத் தலைமுறை தலைமுறையாய் பிறப்பின் அடிப்படையில் பெற்றிருப்பவர் தான் திரு.மோகன் பகவத் அவர்கள். அவரோ, அவரது குலத்தவரோ சாதியின் பெயரால், வர்ணத்தின் பெயரால் இழிவுகளையும் வன்கொடுமைகளையும் வறுமையின் வதைகளையும் சந்தித்திருந்தால் அவரால் இப்படி யாவற்றையும் மறந்துவிட்டு இந்துவாக அணிதிரளுவோம் வாருங்கள் என்று கூறுவாரா?

போகிற போக்கில்
ஒரே ஒருநாள் சேரியிலோ, குப்பத்திலோ அவரால் வாழ்ந்து காட்ட முடியுமா? ஒரே ஒருநாள் ஏர்பிடிக்கும் விவசாயக் கூலியாகவோ, செருப்புத் தைக்கும் தொழிலாளியாகவோ வாழும் அளவுக்கு அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா? அவ்வாறு வாழும்நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தால் இப்படி போகிற போக்கில் சாதி- வர்ணம் யாவற்றையும் என அவரால் உளறமுடியுமா? வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி உடலை வருத்தி வேர்வை - குருதி சிந்தி உழைப்பதோடு; விலங்குகளை விடவும் இழிவான முறையில் நடத்தப்படும் அளவுக்கு மிகவும் குரூரமான வன்கொடுமைகளையெல்லாம் சந்திக்கக் கூடியவராக இருந்தால் இப்படி அவரால் பிதற்றமுடியுமா?

சமத்துவ கொள்கை
அவருக்கு நேர்மைத் திறமிருந்தால்ர சனாதனத்தின் கொடூரத்தையும் அதனால் ஆயிரம் தலைமுறைகளாகப் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான எளியமக்களின் வலிமிகுந்த உணர்வுகளையும் ஏற்றுக்கொண்டு, அத்தகு சனாதனத்தை வேரறுக்க முன்வர வேண்டாமா? அதன்மூலமே மதமாற்றங்களையெல்லாம் தடுத்து இந்து மதத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை உணரவேண்டாமா? சுய பகுப்பாய்வு மற்றும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் துணிச்சலைப் பெற வேண்டாமா? சாதியை ஒழித்து சமத்துவம் படைக்க உறுதியேற்று முற்போக்கான திசைவழியில் பயணிக்க வேண்டுமென்கிற தெளிவைப் பெற வேண்டாமா? மனிதகுலத்துக்கு எதிரான கோல்வாக்கரின் கொடுநஞ்சுக் கொள்கைகளை உதறிவிட்டு மாமனிதர் புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளை உள்வாங்க வேண்டாமா?

போராட வாருங்கள்
மோகன் பகவத் அவர்களே. தாங்கள் கூறுவதைப்போல சாதியும் வர்ணமும் மறந்துவிடக்கூடியவை அல்ல. வேரோடு கிள்ளியெறிந்து முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டியவை. இதனை உணர்ந்து ஒப்புக்கொண்டு சாதியை- வர்ணத்தைச் சிதைப்பதற்கு; எச்ச சொச்சமும் இல்லாத அளவுக்குத் துடைத்தெறிய; அதற்கென போராட முன் வாருங்கள்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications