முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த அறிவிப்புகள்...ஏக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஜாதி சமூகங்கள்!
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம், அயோத்திதாசருக்கு மணி மண்டபம் என அடுத்தடுத்த அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தங்கள் ஜாதியினருக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றன சில சமூகங்கள்.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பா.ம.க.வுடன் ஒருவித நெருக்கம் காட்டுகிறது திமுக. அதேபோல் பாமக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் ஆளும் கட்சி கோதாவில்தான் வலம் வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலிலேயே கூட திமுக அணிக்கு பாமக போகலாம் என்கிற பேச்சுகளும் எழுந்தன. இருந்தபோதும் தேமுதிக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுவிடலாம் என்கிற சூழ்நிலையைத் தடுக்கவே திமுகவுடன் நெருக்கம் என்கிற யுக்தியை பாமக கையாண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மகள் திருமண அழைப்பிதழுடன் இன்று முகம் முழுவதும் அத்தனை மகிழ்ச்சியுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

வன்னியர் உள் இடஒதுக்கீடு
மேலும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தியும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு செக் வைக்கும் விதத்திலும் வன்னியர் சமூகத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முகமாக சில பல நடவடிக்கைகளை எடுத்தார். இது தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, அதிமுக அரசில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை தனது ஆட்சியிலும் நிறைவேற்ற உறுதி செய்து அதனை அமல்படுத்த உத்தரவிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் நினைத்திருந்தால் அந்த சட்டத்திற்கு எதிரான திருத்த மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிருக்க முடியும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி எதுவும் செய்யவில்லை.

விசிக எதிர்ப்பு
அப்போதே, இந்த 10.5% இடஒதுக்கீட்டை திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் எதிர்த்தது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் தனது எதிர்ப்பை மறைமுகமாகவே திமுக தலைமைக்கு தெரிவித்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 10.5% இடஒதுக்கீட்டை திமுக அரசு அமல்படுத்திவிட்டது.

தலித்துகள் மகிழ்ச்சி
அதன்பிறகு, வன்னியர் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம், அந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை என தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிட்டு வன்னியர்களிடம் சபாஷ் வாங்கினார் ஸ்டாலின். ஆனால் இன்னொருபக்கம் தலித் சமூகத்தினரால் இந்த அறிவிப்புகளை ஜீரணிக்க முடியவில்லை. தலித் சமூகத்தின் இந்த எதிர்மறை விமர்சனங்களை சமாளிக்கும் வகையில் அடுத்ததாக தலித் சமூகத்தின் ஆகப் பெரிய தலைவராக கருதப்படும் அயோத்திதாசருக்கும் மணி மண்டபம் என அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இங்கேயும் ஒரு சிக்கல் வெளிப்பட்டிருக்கிறது.

பிற சமூகத்தின் எதிர்பார்ப்பு
அதாவது வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினரை மட்டும்தான் திமுக அரசு தூக்கிப்பிடிப்பதாக மற்ற சமூகத்தினர் மத்தியில் அதிருப்தி கிளம்பியது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றன. அதனால்தான் வன்னியர் சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைப்போம் என தீர்மானித்திருந்த முதல்வர் ஸ்டாலின், அதனை சுருக்கி அவருக்கு சிலையும் அரங்கமும் அமைக்கப்படும் என மாற்றினாராம். இதற்கிடையே மற்ற சமூகத்தினரின் அதிருப்திகளைப் போக்குவதற்காக புதிய புதிய அறிவிப்புகளை செய்யவிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். ஏதோ ஒரு வகையில் நல்லது செய்யப் போய் தெரியாத்தனமாக ஜாதிய சிக்கல்களுக்குள் முதல்வர் மாட்டிக் கொள்வாரோ என்ற தயக்கமும் அச்சமும் தலைமை செயலக அதிகாரிகளிடம் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications