காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு முடிவு!
சென்னை: வரும் 9-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. இதில், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நீரை கர்நாடகா உரிய முறையில் கொடுப்பதில்லை. 5,000 கன அடி காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் சொல்லியும்கூட, கர்நாடகா இதனை ஏற்கவில்லை.. 18 நாட்களுக்கு காவிரியில் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவையும், கர்நாடகா ஏற்கவில்லை..

பெயரளவுக்கு சிறிது நீரை தந்துவிட்டு, காவிரி நீரை ஒரு சொட்டுகூட தமிழ்நாட்டுக்கு திறந்துவிட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன. கர்நாடகாவில் மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை என்று காரணங்களையும் சொல்லி வருவருடன், போராட்டங்களையும் நடத்தி, வருகிறார்கள். இப்படி, காவிரி விவகாரத்தில் தொடர்ந்து கர்நாடக முரண்டு பிடித்து வருகிறது.
தற்போது அக்டோபர் 15 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் கர்நாடக அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தான், காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுபடி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடும்படி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள் கிழமை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபை வரும் திங்கள் கிழமை கூடுகிறது. சட்டசபையில் முதலில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். பின்னர் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வினாக்கள் - விடைகள் நேரம் நடைபெறும்.
பின்னர் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவைக்கு அளிப்பார். பின்னர் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுபடி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றும்படி முதல்வர் கோருவார். இந்த தீர்மானத்தில் அந்தந்த அரசியல் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications