ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரம்: கேசவ விநாயகத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு?
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் சம்மன் அனுப்பி கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தென் மாவட்டத்திற்கு செல்லும் ரயிலில் இருந்து ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நவீன், பிரதீஷ், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ரூ.4 பணமானது பாஜகவின் நயினார் நாகேந்திரனுடையது என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ் ஆர் சேகர், முரளி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரு.4 கோடி பணம் என்னுடையது என ரயில்வே கேண்டீன் உரிமையாளரான முஸ்தபா என்பவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் கூறியிருந்தார். இதையடுத்து முஸ்தபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் இந்த பணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், அவர் பொய்யான தகவலை தெரிவித்தார் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் பின்னர் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி கேசவ விநாயகத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று விசாரிப்பது கடினம் என்றும், எனவே உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து தான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி கூறியதால் தற்போது கேசவ விநாயகத்திற்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் சம்மன் அனுப்பி கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications