கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.. சிபிசிஐடி சொன்ன மேஜர் விஷயம்
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கு செப். 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா.. இவர் முதல்வராக இருக்கும் போதும் சரி எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனது கோடநாடு பங்களாவில் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், அதன் பிறகு கோடநாடு பங்களாவுக்குப் பெரியளவில் யாரும் செல்லாமலேயே இருந்தனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் சில மோசமான சம்பவங்கள் அரங்கேறின.

கடந்த 2017இல் கோடநாடு பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்த ஓம் பகதூர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது மட்டுமின்றி அங்கிருந்த பல பொருட்களும் கூட கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்போது மாநிலம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஒருவரது பங்களாவிலேயே இப்படியொரு மோசமான சம்பவம் நடந்ததைப் பலரும் விமர்சித்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் மேலும் மர்மமான பல சம்பவங்கள் நடந்தன. அதாவது இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

கொலை, கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்த நிலையில், அவர்கள் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் மாற்றப்பட்டது.
அதன் பின்னர் சிபிசிஐடி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இதற்கிடையே இந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று மீண்டும் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. இதற்கிடையே இந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை செப். 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
அதேபோல, இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாரும் கூடுதல் அவகாசம் கோரியிருந்தனர். இதையடுத்து வழக்கை செப். மாதத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால், அடுத்த விசாரணையில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications