கோடநாடு விவகாரம்.. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் திட்டம்? வெளியான தகவல்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு அரங்கேறிய கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அடுத்தகட்டமாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் சொந்தமான தேயிலைத் தோட்டம், பங்களா உள்ளது. ஆட்சியில் இருக்கும் போதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதும் சரி இங்கு தான் அவர் ஓய்வெடுப்பார். இதனால் அதிமுக தலைவர்களும் அடிக்கடி முகாமிடும் இடமாகவே கோடநாடு பங்களா இருந்தது.

கோடநாடு
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த பங்களா யாரும் பயன்படுத்தாமலே இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த 2017ம் ஆண்டு அந்த பங்களாவில் அடுத்தடுத்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது..
ஆனால், இந்த கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களிலேயே கனகராஜ் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், கோடநாடு பங்களா சிசிடிவி ஆபரேட்டர் தினேஷும் தமது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோல அடுத்தடுத்து கோடநாடு பங்களாவில் நடந்த சம்பவங்கள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சிபிசிஐடி போலீசார் விசாரணை
இந்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களுக்குப் பின்பு ஜாமீன் கிடைத்துவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கு இப்போது உதகமண்டல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் 500க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். மேலும், 250க்கும் மேற்பட்டோருக்குச் சம்மன் அனுப்பி விசாரித்துள்ளனர்.
சுதாகரனிடம் விசாரணை
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்த இந்த சுதாகரன் திருமணத்தைத் தான் நாட்டையே திரும்பி பார்க்கும் வகையில் ஜெயலலிதா நடத்தியிருந்தார். அதைத்தொடர்ந்தே வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பு வழக்கிலும் சிக்கியிருந்தார். அது தனிக்கதை.! அந்த சுதாகரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிபிசிஐடி போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தனக்குத் தெரிந்த பதிலை அளித்ததாகச் சுதாகரன் தெரிவித்தார். அதேநேரம் தன்னை மீண்டும் விசாரணைக்கு வர சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அடுத்து எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே விசாரணை குறித்த அடுத்தகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வழக்கில் அடுத்தகட்டமாக எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விசாரிக்க சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.. இந்தச் சூழலில் தான் கோடநாடு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எடப்பாடி பழனிசாமிக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications