உணவுப்பொருள் பெயரில் போதைப்பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக் போட்ட பிளான் இதுதான்! சிபிஐ குற்றச்சாட்டு
சென்னை: உணவு பொருட்கள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தியதாக, அமலாக்கத் துறை, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கடந்த ஜூன் 26 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக், அவரின் சகோதரர் அப்துல் சலீம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்த போது, அமலாக்க துறையின் உதவி இயக்குனர் ராகுல் வர்மா பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், உணவு பொருட்கள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாகவும், போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக், முக்கிய மூளையாக செயல்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த வருமானத்தை ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு திருப்பி விட்டதாகவும், இதற்காக பல்வேறு பினாமி நிறுவனங்களை ஜாபர் சாதிக் நடத்தி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் 49 கோடி ரூபாய்க்கு மேல் சென்னையில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும், 4 கோடியே 38 லட்ச ரூபாய்க்கு சொகுசு கார்களை வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக்-குக்கு ஜாமீன் வழங்கினால், அவர் இதே போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாலும், சாட்சிகளை கலைப்பதற்கும், ஆவணங்களை அழிப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாலும் ஜாமீன் வழங்க கூடாது என்றும் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜாபர் சாதிக்கின் சகோதரர் அப்துல் சலீமிற்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை தரப்புல பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications