கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது.. தமிழிசை விளக்கம்!
கஜா புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே உதவி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. மக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு சார்பாக இதுவரை ஒரு ரூபாய் கூட அளிக்கப்படவில்லை. இது தமிழக மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய குழு தற்போது தமிழகம் முழுக்க இதற்காக புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் கஜா நிவாரணத்தில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு உதவி வருகிறது. மத்திய அரசின் உதவி இன்றி மாநில அரசு இவ்வளவு வேகமாக செயல்பட முடியாது.
மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் கூட சிலர் மத்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள்.
மத்திய அரசின் உதவியோடுதான் பணிகளே நடக்கிறது. மத்திய அரசின் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய நிவாரண பணி வேகமாக நடக்குமா சொல்லுங்கள்.
என்னால் தினமும் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடியாது. மக்கள்தான் மத்திய அரசின் உதவியை புரிந்து கொள்ள வேண்டும், என்று தமிழிசை பேட்டியளித்துள்ளார்.