3 தமிழக அமைச்சர்களுக்கு குறிவைத்த டெல்லி... விரைவில் அதிமுக பொதுச்செயலராகும் ஓபிஎஸ்!
Recommended Video
சென்னை: தமிழக அமைச்சர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி தயாராகிவிட்டதாம்.. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நியமிக்கவும் டெல்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் தமிழக அரசு இரண்டுமே டெல்லியின் பிடியில் சிக்கியுள்ளன. லோக்சபா தேர்தல் தோல்வியை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி தரப்பு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது டெல்லி.
அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடப்பாடி தரப்பு முயற்சிப்பதை டெல்லி ரசிக்கவில்லை. இதனை டெல்லியில் சந்தித்த தமிழக அமைச்சர்களிடம் பாஜக மேலிடம் திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டது.

டெல்லி விரைவில் நடவடிக்கை
தமிழக அமைச்சர்களின் ஊழல்கள் பட்டியலையும் டெல்லி தற்போது கையில் எடுத்திருக்கிறதாம். விரைவில் 3 அமைச்சர்களுக்கு எதிராக டெல்லி அதிரடி நடவடிக்கை எடுக்கு உள்ளதாம்.

பாஜகவின் வியூகம்
இந்த நடவடிக்கையானது முதல்வர் எடப்பாடி முகாமின் பலத்தை குறைப்பதற்கும், ஊழலுக்கு எதிராக தயவு தாட்சண்யம் பார்க்காமல் டெல்லி நடவடிக்கை எடுக்கிறது என்பதை வெளிப்படுத்தவுமாக பயன்படுத்த இருக்கிறதாம் பாஜக. அதேஜோரில் அதிமுகவில் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் திட்டத்தையும் வைத்திருக்கிறதாம்.

ஒற்றைத் தலைமை
அதிமுகவின் பொதுச்செயலராக ஓபிஎஸ்ஸை நியமித்துவிட்டு ஒற்றைத் தலைமை- வலிமையான தலைமை என்பதை முன்னிறுத்த விரும்புகிறது பாஜக. அப்படி செய்தால் சிதறிப் போன அதிமுக தொண்டர்கள் மீதும் அதிமுகவுக்கே திரும்புவார்கள் என்பது அக்கட்சியின் கணக்கு.

முதல்வர் எடப்பாடிக்கு சிக்கல்?
அதேநேரத்தில் ஆட்சியில் முதல்வராக எடப்பாடி நீடித்தாலும் அவருக்கும் எந்த நேரத்திலும் நெருக்கடி வரலாம் என்கிற ஒரு சூழ்நிலையையும் உருவாக்கி வைப்பது என திட்டமிட்டிருக்கிறதாம் பாஜக. இதனால்தான் அதிமுக அரசு மீது விமர்சனங்களை பாஜக காட்டமாக வைத்தாலும் அதிமுகவை காப்பாற்றுவதில் படுமுனைப்பாகவும் இருக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications