சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுள்ளென்று அடித்தாலும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு. கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம், தருமபுரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, கோவை, கன்னியாகுமரியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் வெளியுட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும்.
செப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரைக்கும் தென் கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல், தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த சூறவாளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் கடல் அலை 3 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை கடல் அலை உயரக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications