சென்னை, தென்காசி என மொத்தம் 13 மாவட்டங்கள்.. 1 மணி வரை மழை இருக்கு! வானிலை மையம்
சென்னை: சென்னையில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலயில், தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த மாதம் நல்ல மழை வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கத்தால் தகித்துக் கொண்டு இருந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை கொடுத்தது.

அதன் பிறகு அதே அளவுக்கு மழை பெய்யவில்லை என்ற போதிலும், அவ்வப்போது மழை தலை காட்டி சென்றது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் தான், தலைநகர் சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சில இடங்களில் காற்றுடன் மழை பெய்ததது. இந்த திடீர் மழை மக்களின் மனதையும் குளிர்ச்சி படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிளைமேட்டும் வெயிலின் தாக்கம் இன்றி மேகமூட்டமாக இருப்பதால் விடுமுறை தினத்தை ஜில்லாக மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications