சந்திரபாபு நாயுடு மோடியை சும்மா விடமாட்டார்.. பாஜக அரசு கவிழப்போகுது! தயாநிதி மாறன் சொல்வதை பாருங்க!
சென்னை: இந்தி பேசும் பீகார் மாநிலத்திற்கு 37,000 கோடி ரூபாயை சுளையாக கொடுத்துள்ள மத்திய பாஜக அரசு, சந்திரபாபு நாயுடுவுக்கு வெறும் உத்தரவாதத்தை மட்டுமே கொடுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு இதனை சும்மா விட மாட்டார். விரைவில் பாஜக அரசு கவிழும் எனத் தெரிவித்துள்ளார் திமுக எம்.பி தயாநிதி மாறன்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு, வடக்கு, வடகிழக்கு மாவட்டங்கள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் முதல் கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்றபோது, நான் தமிழனாக பிறக்கவில்லையே என்று வருந்துவதாக தெரிவித்தார். தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு இறுதிக் கட்ட தேர்தல் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் போது, அங்கு நடைபெற்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற மோடி, ஒடிசா மாநிலத்தை தமிழன் ஆளலாமா? என்று விமர்சித்து இருந்தார். அவர் ஓட்டுக்காக எப்படி வேண்டுமானாலும் பேசக் கூடியவர்.
பீகார் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார் பிரதமர் மோடி. ஏனென்றால் அது இந்தி பேசும் மாநிலம். குஜராத் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது அம்மாநிலம் கேட்காமலேயே அடுத்த நாளே வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி ஒதுக்கினார். தமிழகத்தில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்கு ரூ.34,000 கோடி இழப்பீடு கேட்டபோது, வெறும் ரூ.257 கோடியை தான் மோடி கொடுத்தார்.
இந்தி பேசாத ஆந்திர மாநிலத்துக்கு பட்ஜெட்டில் ரூ.16 ஆயிரம் கோடி கடன் வாங்க மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என உறுதி அளித்துள்ளார். அதாவது அவர்கள் கடன் வாங்கிக் கொள்ளலாம். கடனையும், வட்டியையும் அம்மாநிலமே செலுத்த வேண்டும். இந்தி பேசும் மாநிலத்துக்கு வாரி வழங்கும் மோடி, இந்தி பேசாத மாநிலத்தை பழி வாங்குகிறார். இதனால் சந்திரபாபு நாயுடு தனது ஆதரவை திரும்பப்பெறும் சூழல் விரைவில் ஏற்படும். அதனால் மத்திய ஆட்சி நிலைக்காது.
தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழும் இல்லை, தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை. தமிழக மக்கள் யானை மாதிரி. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்ததை தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தயாநிதி மாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்தியில் ஆளும் பாஜக அரசு வாயாலேயே வடை சுடும். நிர்மலா சீதாராமன் போல் வடை சுட யாராலும் முடியாது. மத்திய அரசு தமிழ்நாட்டை பழிவாங்குகிறது.
ஆந்திராவுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியாகவோ அல்லது கடனாகவோ கொடுக்கவில்லை. கடன் பெற வெறும் உத்தரவாதம் தான் கொடுத்துள்ளார்கள். சந்திரபாபு நாயுடு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம், அதற்கான அசல் தொகையையும் வட்டியையும் அவர் தான் கட்ட வேண்டும் என்றும் வெறும் உத்தரவாதத்தை மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளது.
இந்தி பேசும் பீகார் மாநிலத்திற்கு 37,000 கோடி ரூபாயை சுளையாக கொடுத்துள்ள மத்திய அரசு, சந்திரபாபு நாயுடுவுக்கு வெறும் உத்தரவாதத்தை மட்டுமே கொடுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு இதனை சும்மா விட மாட்டார். விரைவில் பாஜக அரசு கவிழும்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications