விண்ணில் பாயத் தயார் நிலையில் சந்திராயன் 3 விண்கலம்! 2 நாட்களில் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!
சென்னை: சந்திராயன் 3 விண்கலம் வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35க்கு விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் அதற்கான கவுண்ட் டவுன் இன்னும் 2 நாட்களில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஸ்டார்ட் ஆகவுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 1 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட நிலையில் சந்திராயன் 2 திட்டம் வெற்றியடையவில்லை. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 2 தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது.

இந்நிலையில் சந்திரயான்-2ஐ தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் பணியை மேற்கொள்ளும் திறனுடன் விண்ணில் ஏவப்படவுள்ளது.. சந்திராயன் 3ஐ பொறுத்தவரை லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கு உதவிக்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயன் 3ஐ விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூலை 14ஆம் தேதி அன்று சந்திராயன் 3 விண்ணில் பாய்ச்சப்படும். இதற்கான கவுண்ட் டவுன் வரும் வியாழக்கிழமையே தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயன் 3 விண்கலத்தை பொறுத்தவரை முறையாக தரையிறங்காவிட்டால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்தால் என்ன செய்வது, என்பன உள்ளிட்ட எந்தெந்த வகைகளில் எல்லாம் தோல்விகள் ஏற்படுமோ அதனை அடிப்படையாக வைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.
சந்திராயன் 3 விண்கலத்தில் அதிகளவில் எரிபொருள் நிரப்பும் வசதி இருப்பதுடன் விக்ரம் லேண்டரில் கூடுதல் சோலார் பேனல்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications