அதிமுகவின் புதிய பொருளாளர்.. கடும் போட்டியில் எட்டிப் பிடித்த சீனிவாசன்- பின்னாடி இப்படி ஒரு கணக்கு!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்து, அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கி அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதனால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி யாருக்குச் செல்லும் என்ற கேள்வி எழுந்தது.
இன்று நடைபெற்று வரும் பொதுக்குழுவில் பொருளாளர் சமர்ப்பிக்க வேண்டிய வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.

அதிமுக செயற்குழு
அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 9.15 மணிக்கு வானகரத்தில் தொடங்கியது. சரியாக 9.15 மணிக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுக்குழு
பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் சரியாக 9.35 மணிக்குத் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக்குழுவிற்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச் செயலாளர்
பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளர் தேர்தல் 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவு கணக்கு
அதைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். வழக்கமாக கட்சியின் பொருளாளர் தான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் பங்கேற்காத நிலையில் அமைப்புச் செயலாளரான சி.விஜயபாஸ்கர் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்தார்.

விஜயபாஸ்கர்
வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இன்றைய இடைக்கால பொதுச்செயலாளர், நாளைய நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பேசினார். மேலும், ரூ.244.80 கோடி நிலை வைப்புத் தொகை அதிமுக கணக்கில் உள்ளது. நடப்பு கணக்கில் ரூ.2.77 கோடி ரூபாய் உள்ளது. 9.01.2021 முதல் 22.06.2022 வரை வரப்பெற்றுள்ள மொத்த வரவு ரூ.53.4 கோடி. மொத்த செலவுகள் ரூ.62 கோடி எனத் தெரிவித்தார்.

அதிமுக பொருளாளர்
அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்புக்கு எதிராக இருந்து வரும் நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஈபிஎஸ் தரப்பு. இதனால் ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் அதிமுக பொருளாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாளர் யார்?
இன்றைய பொதுக்குழுவில் விஜயபாஸ்கர் கட்சியின் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ததால் அதிமுகவின் பொருளாளராக சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அதிமுகவின் புதிய பொருளாளராக, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சிவி.சண்முகம் உள்ளிட்ட பலரும் போட்டி போட்ட நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் இந்தப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ளார்.

அதே சமூகம்
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்த நிலையில், அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் அதே சமூகத்தைச் சேர்ந்த தென்மாவட்டச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications