'ஏமாற்றுவது, கட்சி மாறுவது எல்லாம் அரசியலில் சாகஜமப்பா..' காங்கிரசின் டி.கே சிவக்குமார் பளீச்
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குச் சென்ற எம்எல்ஏக்களை மீண்டும் அழைக்கும் வகையில், கட்சி மாறுவது எல்லாம் அரசியலில் சகஜம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து அங்கு ஆட்சியை அமைத்தது. இருப்பினும், இந்த ஆட்சி சில மாதங்கள் வரை மட்டுமே அங்கு நீடித்தது.

17 எம்எல்ஏக்கள்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் அப்படியே பாஜகவில் சென்று இணைந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு, அதே எம்எல்ஏக்கள் மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பிற்கே காரணமாக இருந்த அந்த 17 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்கு அழைக்கும் வகையில் அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.

ஏமாற்றுவது
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏமாற்றுவது எல்லாம் அரசியலில் சகஜமாக நடக்கும் ஒன்று. எனக்கு என்று இல்லை நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் பாஜகவின் பிரதாப் கவுடா பாட்டீல் எங்கள் கட்சியில் இணைந்தார். என்ன சொல்ல வருகிறேன் என்றால், நம் கட்சியில் இருந்து ஒருவர் வேறு கட்சிக்குச் செல்வதும், அவர்கள் திரும்பி வருவதும் அரசியலில் இயல்பாக நடக்கக் கூடியது.

கட்சியின் முடிவு
நான் அந்த 17 பேரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. யாராக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் உடன்பாடு இருந்தால், அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தொண்டர்கள் மற்று நிர்வாகிகளிடம் இருந்து கருத்துக் கேட்டு இதில் முடிவு எடுக்கப்படும். ஏனென்றால், கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால், கட்சியின் முடிவு தான் இறுதியானது" என்றார்.

எடியூரப்பா அரசு
தொடர்ந்து எடியூரப்பா அரசை விமர்சித்துப் பேசிய அவர், "மக்கள் நலன் சார்ந்த இந்த அரசு எடுக்கும் முடிவுகளை நாங்கள் எதிர்க்கப் போவதில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக்கூட இந்த அரசு எந்த விதமான நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது எனத் தெரியவில்லை. இவர்களுக்கு உரிய நிவாரணத்தை எடியூரப்பா அரசு அறிவிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications