ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாது! புற்றுநோயுடன் போராடி மீண்ட செஃப் மெனு ராணி செல்லம்
சென்னை: ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் இருந்த தான் புற்றுநோயுடன் எவ்வாறு போரிட்டு மீண்டு வந்தது குறித்து பிரபல சமையல் கலை நிபுணர் மெனு ராணி செல்லம் தெரிவித்துள்ளார்.

சமையல் கலையில் 50 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் செஃப் மெனு ராணி செல்லம். இவர் தொலைக்காட்சி, செய்தி தாள், வார இதழ்கள் ஆகியவற்றுக்கு நிறைய சமையல் குறிப்புகளை அளித்துள்ளார்.
"ஹாய் வியூவர்ஸ்! எப்படி இருக்கீங்க! நைஸ் டு மீட் யூ ஆல் அகைன் இன் திஸ் எபிசோடு" என மிகவும் மென்மையான குரலில் பேசுவார். இப்போதுதான் நிறைய பேர் சமையல் குறிப்பு வீடியோக்களை கூறி வருகிறார்கள்.
அப்போதெல்லாம் தர்மாம்பாள், மெனு ராணி செல்லம் உள்ளிட்டோர்தான் பிரபலம். இவர்கள் இருவருமே வயது முதிர்ந்தவர்கள் என்பதால் எந்த பொருளை எப்படி வறுக்க வேண்டும். எதை எந்த நேரத்தில் சேர்க்க வேண்டும் என்ற டிப்ஸ்களுடன் சமையல் கலையை உலகெங்கும் வாழும் மக்கள் பார்த்து பயனடையும் படி கொண்டு சென்றனர்.
இதுவரை ஏராளமான டிஷ்களை செய்து காட்டி அசத்திய மெனு ராணி செல்லத்திற்கு அவருடைய 80 வயதுகளில் புற்றுநோய் வந்து அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை ஒரு யூடியூப் சேனலுக்கு விவரித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கு வாயில் சிறிய பரு போன்று ஒரு கட்டி படிப்படியாக வளர்ந்து அமெரிக்காவில் அதற்கு அறுவை சிகிச்சை செய்தேன். முதலில் சிறியதாக இருந்த நிலையில் பிறகு அது நெல்லிக்காய் சைஸில் பெரிதானது.
பின்னர் இரண்டாவது முறையும் கட்டி கழுத்தில் வந்த போது கழுத்தை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதன் பிறகு, ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. கொரோனா பரவலின் போது சமையல் வகுப்புகள், புத்தக வெளியீடுகள், யூடியூப் சேனல் உள்ளிட்டவைகளை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் குழந்தைகளுடன் இருந்தேன்.
முதல் முறை வந்த கட்டிக்கு கீமோதெரபியோ ரேடியேஷன் தெரபியோ தேவைப்படவில்லை. ஆனால் இரண்டாவது முறை கழுத்தில் வந்த கட்டிக்கு 33 அமர்வுகள் ரேடியேஷன் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் பேச சிரமமடைந்தேன். உணவு கூட சரியாக உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். தினமும் ஆயிரம் உணவுகளை சுவைக்கும் நான் ஒரு உணவை கூட எடுக்க முடியாத நிலையில் இருந்தேன்.
இருந்தாலும் எனது நேர்மறை ஆற்றலால் எல்லா துன்பத்தையும் கடந்து புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளேன். என் வலியைப் பார்க்கும்போது, மற்றவர்களின் சிரமங்களை நினைத்தால் நான் எதுவுமில்லை. 77 வயதில் இவ்வளவு செய்திருக்கிறேன், இன்னும் செய்வேன் என்றார்.
மெனு ராணி செல்லம், சமையல், ஓவியம், இசை, வெஜிடபிள் கார்விங் உள்ளிட்ட பல்துறை திறமைகளைப் பயன்படுத்தி வகுப்புகளைத் தொடர்கிறார். அவர் தற்போது இந்தியாவில் வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications