விடாது பெய்யும் கனமழை.. 21 அடியை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.. கிராமங்களுக்கு எச்சரிக்கை!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் முழு உயரமான 24 அடியில் 21 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
கடந்த சில நாட்களாக விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஏரிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

642 கனஅடி நீர்வரத்து
இந்த நிலையில் செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 642 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்று காலை 2850 மில்லியன் கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியான திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 அடி நிரம்பியது
இதுமட்டுமல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21 அடிக்கு தண்ணீர் நிரம்பியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து 3வது நாளாக வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் எரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு எச்சரிக்கை
சிறுகளத்துர், காவனூர், குன்றத்துர் திருமுடிவாக்கம். வழுதியம்பேடு. திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்துள்ளார்.

முன்னெச்சரிக்கை
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஏரியில் நீர் வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் ஏராளமானோர் நேரடியாக வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications