பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார்: செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு டிரான்ஸ்பர்
சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி.கண்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறி செயல்பட்ட செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு டிஜிபி மீது பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்ததாக எஸ்.பி.கண்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், அண்மையில் முதல்வர் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது அவரை வரவேற்க வந்த மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாருக்கு ஆளான ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிப்புக்கு உள்ளான பெண் எஸ்பி சென்னையில் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக தனது காரில் சென்ற போது, பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் வழிமறித்து, டிஜிபியிடம் புகார் செய்ய வேண்டாம், இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்று கூறியதாக தெரிகிறது.
செங்கல்பட்டு டிஎஸ்பி மூலமாக பெண் எஸ்பி.யின் கார் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டாராம். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், அவருடன் இருந்த டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளார்.
புகாருக்கு ஆளான எஸ்.பி கண்ணன் தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் இ. சுந்தரவதனம் ஐபிஎஸ் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.துரை ஐபிஎஸ் சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.