பைக்கில் லிஃப்ட் கேட்டதே உயிருக்கு உலையாக மாறியது.. ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: சென்னை ஆவடி அருகே, கல்லூரி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த இளைஞர், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்து பட்டாபிராம், தென்றல் நகர் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவர், திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கொரட்டூரில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அம்பத்தூர் அருகே, பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞர், வீட்டிற்குச் செல்வதற்காக, பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக அம்பத்தூரில் காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த யோகேஷிடம், அஜய் லிப்ட் கேட்டு பயணித்துள்ளார். இருவரும் திருமுல்லைவாயில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணி அருகே வேகமாக வந்து கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது.
இதில், சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதியதில், பின்னால் இருந்த அஜய் தூக்கி வீசப்பட்டார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த யோகேஷ், சிறிய காயங்களுடன் ஆவடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், உயிரிழந்த அஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வரும்போது ஏற்பட்ட சாலை விபத்தில், இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications