விமானத்தில் அடிக்கப்படும் பச்சை லேசர் லைட்.. சென்னையில் மட்டுமல்ல.. உலக அளவில் சதி.. வெளியான பின்னணி
சென்னை: சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது பச்சை நிற லேசர் லைட் அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது சென்னை மட்டுமன்றி உலக அளவில் நடக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மடகாஸ்கரின் டானாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தை இதேபோல் லேசர் மூலம் சில விஷமிகள் அச்சுறுத்தி உள்ளனர். மடகாஸ்கரில் கடந்த 1 வாரமாக இந்த சம்பவம் தீவிரமாக நடந்து வருகிறது. அதோடு இல்லாமல் தாய்லாந்திலும் சில விமானங்கள் மீது இப்படி சில விஷமிகள் லேசர் ஒளி வைத்து தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த விவகாரங்கள் சர்வதேச அளவில் விமானங்களை கவிழ்க்கும் சதி திட்டமாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
சென்னை விமானம் லேசர்
சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரம் காலை தரையிறங்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 வாரங்களில் இது 3வது சம்பவம் ஆகும். விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து பத்திரமாக தரையிறக்கினர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேசர் ஒளி தாக்குதல் சம்பவங்கள்
ஜூன் 5ஆம் தேதி துபாயிலிருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் EK542 விமானம், தரையிறங்கும் போது சுமார் ஆறு கடல் மைல் தூரத்தில் இருந்தபோது, பச்சை நிற லேசர் ஒளி விமானியின் கண்களைக் கூசச் செய்தது. இதனால் விமானி வேறு வழியின்றி விமானத்தை மீண்டும் மேலே செலுத்தி, பின்னர் பத்திரமாக தரையிறக்கினார்.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் சென்னை விமான நிலைய காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். லேசர் ஒளி வந்த திசையை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை என்றும், இதனைச் செய்பவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 125ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, மே 25ஆம் தேதி இதேபோன்று எமிரேட்ஸ் போயிங் 777-300ER விமானம் சென்னை விமான நிலையத்திற்கு அருகே தரையிறங்கும் போது லேசர் ஒளி தாக்குதலுக்கு உள்ளானது. இதன் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேலே சென்றது. பத்து நாட்களுக்குள் நடந்த இந்த 3 சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 17ஆம் தேதி புனேவிலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானம் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் இருந்து வந்த லேசர் ஒளி காக்பிட்டை தாக்கி விமானியை குழப்பியது. விமானிகள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இருப்பினும், இது போன்ற நிகழ்வுகள் விமான நிலையங்களுக்கு அருகே லேசர் பயன்பாட்டின் அபாயத்தை உணர்த்துகிறது.
சென்னை விமான நிலையம் அதிகாரிகள் மற்றும் பரங்கிமலை காவல்துறையினர், விமான நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
விமானத்தின் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் போன்ற முக்கியமான நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது மிகவும் ஆபத்தானது. லேசர் ஒளி ஒரு கணம் விமானியின் கவனத்தை சிதறடித்தாலும், அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "விமானத்தை நோக்கி லேசர் ஒளி பாய்ச்சுவது சட்டப்படி குற்றமாகும். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 125ன் கீழ் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
விமான நிலையங்களுக்கு அருகில் லேசர் ஒளி பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், விமான நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் DJ நடக்கும் இடங்களில் உள்ளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் தேசிய விமானப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் DGCA கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று சம்பவங்கள் ஒரு ஆபத்தான போக்கை காட்டுகின்றன. தனிநபர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் லேசர்கள் தரையிறங்கும் விமானங்களை குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், இது போன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்ட அமலாக்கம், பொது விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.
அதே சமயம் இது விழா இல்லாமல் திட்டமிட்டு விஷமிகள் யாராவது விமானத்தை தாக்க வேண்டும் என்று, விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று செய்யும் செயலா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications