சென்னை விமான நிலையம் டூ கிளாம்பாக்கம் வரை.. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கை சமர்ப்பிப்பு!
சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் - விம்கோ நகர் ஆகிய இரு வழித்தடங்களில் 55 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிமீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் இயக்க பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

அதேபோல் சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான 15.5 கிமீ தொலைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்திருப்பதால், அதுவரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு செய்வது மக்களுக்கு மிகப்பெரிய பலனை அளிக்கும் என்று பார்க்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் என்று 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் உயர்மட்ட பாதையில் பரிந்துரைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2024-25 பட்ஜெட்டின் போது, சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளித்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் நிதி பங்களிப்புக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் செயலளர் கோபாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டம் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications