தமிழ்நாட்டிலேயே முன்னேறிய மாவட்டங்கள்.. சென்னை, கோவைக்கு இப்படி ஒரு நிலையா?
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு (எஸ்.எல்.ஏ.சி.) நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனில் சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டங்களான ஈரோடு, கோவை, சென்னை போன்றவை கற்றல் திறனில் பின்தங்கியுள்ளன. மிழ்நாட்டில் முதன்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 9 லட்சத்து 80 ஆயிரத்து 341 மாணவர்கள் பங்கேற்றனர். 3-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 701 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 270 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 370 மாணவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, மாநில திட்டக் குழு தயாரித்த கற்றல் அடைவு ஆய்வு அறிக்கையை சமர்பித்தார்கள். 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பல்வேறு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதில் மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் கற்றல் திறன் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
3-ம் வகுப்பு மாணவர்கள் தமிழில் 67 சதவீதம், ஆங்கிலம் 69 சதவீதம், கணிதம் 54 சதவீதம், சூழ்நிலையியலில் 76 சதவீதம் கற்றல் திறன் பெற்றுள்ளனர். 5-ம் வகுப்பு மாணவர்கள் தமிழில் 76 சதவீதம், ஆங்கிலம் 51 சதவீதம், சூழ்நிலையியல் மற்றும் கணிதத்தில் தலா 57 சதவீதம் பெற்றுள்ளனர். 8-ம் வகுப்பில் தமிழில் 52 சதவீதம், ஆங்கிலம் 39 சதவீதம், கணிதம் 38 சதவீதம், அறிவியல் 37 சதவீதம், சமூக அறிவியலில் 54 சதவீதம் பேர் கற்றல் திறன் பெற்றுள்ளனர்.
சென்னை கோவை கடைசி
கற்றல் திறன் மேம்பாட்டில் முதல் 5 இடங்களில் கன்னியாகுமரி, கடலூர், மதுரை, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் உள்ளது. நீலகிரி, ஈரோடு, செங்கல்பட்டு, சென்னை, கோவை ஆகிய 5 மாவட்டங்கள் கடைசி இடத்தில் உள்ளன. மாவட்ட அளவிலான தரநிலையில் தமிழ் பாடத்தில் கன்னியாகுமரி, கடலூர், மதுரை, மயிலாடுதுறை, சிவகங்கை முதல் 5 இடங்களிலும், சேலம், கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, சென்னை கடைசி 5 இடங்களிலும் உள்ளது.
கன்னியாகுமரி முதலிடம்
ஆங்கில பாடத்தில் கன்னியாகுமரி, கடலூர், மதுரை, தென்காசி, திருவண்ணாமலை முதல் 5 இடங்களிலும், சேலம், செங்கல்பட்டு, நாமக்கல், கோவை, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்கள் கடைசியிலும் உள்ளது. கணிதப் பாடத்தை பொறுத்தவரையில் கன்னியாகுமரி, கடலூர், மதுரை, தென்காசி, மயிலாடுதுறை முதலிலும், செங்கல்பட்டு, நீலகிரி, ஈரோடு, கோவை, சென்னை கடைசி 5 இடங்களிலும் உள்ளது.
கற்றல் திறன் மேம்பாடு
3, 5 ஆகிய வகுப்புகளில் தமிழ் பாடத்தில் சராசரி மதிப்பெண்கள் 67 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாகவும், கணித பாடத்தில் 54 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகளின் பயன்பாடு ஆகியவை கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறும் போது, 'தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தில் தொய்வு இருக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் 'நாஸ்' ஆய்வுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கற்றல் நிலை தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications