சென்னை மக்களின் 55 வருட கனவு.. எங்கேயோ போன காற்று திசை மாறி.. நந்தனம் கல்லூரியில் செம்ம மாற்றம்
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி ஆரம்பித்த 55 ஆண்டுகளுக்கு பிறகு இருபாலர் கல்லூரியாக செயல்பட தொடங்கி உள்ளது. இளங்கலை முதலாம் ஆண்டு படிப்புகளில் 130 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள நந்தனம் ஆடவர் கல்லூரி, 1969-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கல்லூரி சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக கடந்த 55 வருடங்களில் மாறி உள்ளது. பல லட்சம் மாணவர்கள் இந்த கல்லூரிகளில் பயின்றுள்ளார்கள். சென்னையின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றான நந்தனம் கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் வெறும் 5 படிப்புகளில் பட்டங்களை வழங்கக் கூடிய கல்லூரியாக இருந்து.

ஆனால் காலங்கள் செல்ல செல்ல நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரியில் 16 வகையான இளங்கலை படிப்புகள், 13 வகையான முதுகலை படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட படிப்புகள்கள் கற்பிக்கும் இடமாக மாறியது. தற்போது சென்னையின் முக்கிய அடையாளமாகவும், மாணவர்கள் அதிகம் பேர் படிக்கக் கூடிய கல்லூரியாகவும் நந்தனம் கல்லூரி திகழ்கிறது. இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் அதிக அளவில் மாணவர்களால் விரும்பப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் மட்டும் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
கடந்த ஆண்டு வரை ஆடவர் கல்லூரியாக இருந்த நந்தனம் அரசு கல்லூரியில் இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், அந்த பகுதியை சேர்ந்த மாணவிகள் அதிகம் பயன் அடையச் செய்யவும் ஆடவர் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து பரிசீலித்த அரசு, நந்தனம் ஆடவர் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக கடந்த மாதம் (ஜூன்) அறிவித்து, நடப்பு கல்வியாண்டில் இருந்து இருபாலர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரியாகவும் பெயர் மாறியிருக்கிகறது.
அதேநேரம் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை வருவதற்கு முன்பே, நந்தனம் கல்லூரியில் பெண்களும் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக முடிந்துவிட்டது. இருப்பினும் மாணவிகள் சேரும் விதமாக 2-ம் கட்ட விண்ணப்பப் பதிவும் நடந்தது. தற்போது மாணவர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. . இளங்கலை முதலாம் ஆண்டு படிப்புகளில் காலியாக உள்ள சுமார் 1,400-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், நடப்பாண்டில் தற்போது வரை 200 மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 130 பேர் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு சேர்ந்த மாணவிகள் வகுப்புக்கும் வரத்தொடங்கிவிட்டார்கள். கடந்த 55 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே படித்து வந்த நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி, தற்போது இருபாலர் கல்லூரியாக செயல்படத் தொடங்கி உள்ளது. கல்லூரியின் நுழைவுவாயில் பகுதியில் இருந்த ஆடவர் கல்லூரி என்ற பெயர் பலகையும் மாற்றப்பட்டு, நந்தனம் அரசு கலைக் கல்லூரி என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications