கருப்பு ஆடு? அண்ணா பல்கலை மாணவி விவகாரம்.. அதிமுக இன்று அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து, இன்று அதாவது 27ம் தேதி அதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தது. இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவையொட்டி, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக அதிமுக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், திமுக அரசு பதவியேற்ற நாள்முதலே, தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், வயதானோர் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம்-ஒழுங்கு அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது.

கடந்த 23ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.
வன்கொடுமைகள்: பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதோடு, கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது.
6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் தி.மு.க., அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
காவல்துறை: இதன் காரணமாக, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை.
அதே போல், இந்த அலங்கோல ஆட்சியில், வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; தி.மு.க.,வினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது. ஆளும் தி.மு.க.,வினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.
இன்று ஆர்ப்பாட்டம்: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் பதில் நாளை (இன்று) மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சிபிஐ விசாரணை: அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில், காவல்துறை மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் FIRஐ எப்படி இணையத்தில் வெளியிட்டது? யார் அந்த நபர்? #யார்_அந்த_SIR ? யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த தி.மு.க அரசு? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஸ்டாலின் அரசின் பொறுப்பு! இனி இந்த வழக்கை தி.மு.க அரசின் காவல்துறை விசாரிப்பதற்குத் தார்மீகத் தகுதியில்லை! எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்!" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டப்படி குற்றம். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி, வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. புகார் கொடுத்த ஒரே நாளில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
அருள் விளக்கம்: ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்டவர் வேறு ஒருவருடன் பேசியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஞானசேகரனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications