சென்னையில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை.. தலைமறைவான நண்பரை தேடும் போலீசார்.. திக்திக் சம்பவம்
சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்ட போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக அவரது நண்பர் கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அந்த வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார், ஆய்வு செய்தனர். வீட்டின் முன் பக்க கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், வீட்டின் அருகே சென்ற போது துர்நாற்றம் மிக மோசமாக இருந்துள்ளது. வீட்டின் முன்பக்க கதவு மூட்டப்பட்ட போதிலும், பின்பக்க கதவு பூட்டியிருக்கவில்லை.
இதையடுத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரை வெட்டப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கூட அவரது முகத்தில் அப்படியே இருந்துள்ளது. மேலும், உடல் அழுகி, துர்நாற்றம் வீசி இருக்கிறது. பார்க்கவே பயங்கரமாக அந்த சம்பவம் இருந்துள்ளது.
இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன் (43) என்பது தெரிய வந்தது.
வெங்கடேசன் அவ்வப்போது விருகம் பாக்கத்தைச் சேர்ந்த தனது நண்பர் கார்த்திக் என்பவர் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பாராம். கடந்த சில மாதங்களாகவே இப்படி தான் தங்கி இருந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications