முதல் நாளே இப்படியா.. சென்னை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயிலில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இயக்கப்பட்ட முதல் நாளிலேயே ஜன்னல் கண்ணாடி உடைந்து இருந்தது பயணிகளுக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இந்த ரயிலை முறையாக பராமரித்து பயணிகளுக்கு அசகவுர்யம் இன்றி இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் ரூட்டில் முதல் முறையாக ஏசி மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் காட்ட தொடங்கியுள்ள சூழலில் தற்போது இயக்கப்பட்டு வரும் புறநகர் ஏசி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏசி மின்சார ரயில்
சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் செல்கிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 10.40 மணியளவில் கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும். பின்னர் கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும். இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலை பொறுத்தவரை சென்னை கோட்டை, பூங்கா, எக்மோர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
கட்டணம் அதிகம்
கோடம்பக்காம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லாது. இந்த ரயில் சேவை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இரவு நேர சேவையில் மட்டும் சாதாரண மின்சார ரயில்களை போல அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் சேவை கிடையாது.
இந்த ரயிலுக்கு கட்டணத்தை பொறுத்தவரை மிக அதிகமாக இருப்பதாக பயணிகள் சொல்கிறார்கள், மெட்ரோ ரயில்களை விட அதிக அளவு கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் சொல்லும் கருத்தாக உள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக உள்ளது. ஆனால், இதில் 35 ஆக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக பயணிகள் கூறியுள்ளனர்.
ஜன்னல் கண்ணாடியில் கீறல்
கட்டணத்தை குறைத்தால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினர். ரயில்களின் உட்புறத்தை பொறுத்தவரை பயணிகள் நின்று கொண்டு பயணிக்க ஏதுவாக விசாலமான இடம் உள்ளது. ஏசி ரயில் என்பதால் முழுவதும் கண்ணாடி ஜன்னல்களை கொண்டதாகும்.
இதனிடையே, இந்த ரயில் விடப்பட்ட முதல் நாளே ஜன்னல் கண்ணாடியில் கீறல் விழுந்துள்ளது. உடையும் தருவாயில் உள்ளதால் பயணிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் விட்ட முதல் நாளிலேயே இப்படி நடந்தால் இன்னும் வரும் நாட்களில் இதனை எப்படி பராமரிப்பார்கள் என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications