சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து- கூடுதல் வழித்தடங்களில் 'மெட்ரோ’
சென்னை: சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கூடுதல் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், சென்னை கடற்கரை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கான மின்சார ரயில்கள் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்- செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும் ரத்து செய்யப்படும்; சென்னை கடற்கரைக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 மணி முதல் 3.20 மணி வரை ரத்து செய்யப்படும்.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்படுகிறது; காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து காலையில் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் மின்சார ரயில் சேவைகள் ஒரே நாளில் பெருமளவு ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவைகள் கூடுதல் வழித்தடங்களில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications