சென்னையில் பயங்கரம்.. அப்படியே விழுந்து அமுக்கிய வீட்டின் மேல் தளம்.. தாய், மகள் பரிதாப பலி
சென்னை: வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய் , மகள் பலியான சம்பவம்,
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் கால்வாய் ரோடு பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன் (35). இவரது மனைவி பெயர் சங்கீதா (31) , இவர்களுக்கு யுவஸ்ரீ (7) , கிருஷ்ணகுமார் (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 2 வருடமாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டில் உள்ள அனைவரும், படுத்து தூங்கத் தொடங்கினர். நல்ல தூக்கத்தில் இருந்தபோது, திடீரென, வீட்டின் மேல் தளம் இடிந்து வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சங்கீதா, யுவஸ்ரீ ஆகியோர் மீது விழுந்துள்ளது.
இந்த கொடுமையான சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே சங்கீதா இறந்து விட்டார். பெண் குழந்தையான யுவஸ்ரீ அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு அங்கு சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கட்டிடம் மிகவும் பழமையானது என்பதே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications