சென்னையில் கடும் பனிமூட்டம்! விமானம் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் சாலையை மறைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேபோல விமான சேவைகளும், புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னை தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டிருக்கிறது.

பெங்களூர், மும்பை, கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த விமானங்கள் பனிமூட்டம் காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டிருக்கின்றன. அதேபோல, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இன்று முதல் 11 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
12 மற்றும் 13ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications