ஆம்ஸ்ட்ராங் கொலை! சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! முதல்வர் அதிரடி
சென்னை: சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து பி.அமுதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையின் 110 ஆவது கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர், காவல் துறையின் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது போல் அருண், ஐபிஎஸ்ஸுக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபயாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை அடுத்து சென்னை கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து சென்னை மாநகர கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் ஆள்நடமாட்டம் உள்ள இடத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யார் இவர்: சந்தீப் ராய் ரத்தோர் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியவர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ரத்தோர், 2000ஆம் ஆண்டு சிக்னல் விளக்குகளுக்கு பதில் எல்இடி சிக்னல் விளக்குகளை அறிமுகம் செய்தார்.
2003 ஆம் ஆண்டு முத்திரை தாள் மோசடி நடந்த போது சிபிசிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டார். 2005ல் தூத்துக்குடி எஸ்.பி, 2010ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜி, 2016ல் கடலோர பாதுகாப்பு குழும ஐஜி, 2019ல் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
2014 ஆம் ஆண்டு சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்தின் போது தேசிய மீட்பு படை தலைவராக இருந்தார். அவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் உண்டு. ஆவடியில் காவல் ஆணையரக அலுவலகத்தி் முதல் ஆணையர் என்ற பெருமையை பெற்றார். சென்னை காவல் துறை பயிற்சி கல்லூரியில் டிஜிபியாக பதவி வகித்தார். இதையடுத்து சென்னை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு எதிரொலியாக மீண்டும் பயிற்சி கல்லூரிக்கே இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications