சென்னையில் மீண்டும் ஷாக்! 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராஃபிக் போலீஸ்காரர் கைது!
சென்னை: சென்னையில் போலீஸ் பூத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி காவலர் ஒருவரிடம் உதவி கேட்டபோது, பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமி ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்தச் சிறுமியை போலீசார் தேடி வந்துள்ளனர். இதையடுத்து, அந்தச் சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அந்த 13 வயது சிறுமி, கடந்த 25 ஆம் தேதி தனது நண்பரைச் சந்திக்க வந்தபோது, பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளித்து உதவ வேண்டிய, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் போலீஸ் பூத்தில் வைத்து அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியை வீட்டில் இறக்கி விட காவலர் வாகனத்தில் அழைத்துச் சென்றபோதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். காவலரே 13 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விசாரணையில், 16 வயது சிறுவனும் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தச் சிறுவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகம் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.












Click it and Unblock the Notifications