இரண்டே மாசம்.. ஸ்பீடு காட்டும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. சென்னையில் மாறியது இத்தனை சாலைகளா?
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின், சென்னையில் கடந்த இந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 169 கி.மீ. நீளத்தில் 897 தார்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.20.69 கோடி மதிப்பீட்டில் 24 கி.மீ. நீளத்தில் 196 சிமெண்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக கடந்த மே மாதம் மாற்றப்பட்டார். அதற்கு பதிலாக சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக சுமார் 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வந்த ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சென்னையில் தினசரி சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இதேபோல் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் ஒட்டுமொத்தமாக 2023-24ம் நிதியாண்டில் ரூ.433.28 கோடி மதிப்பீட்டில் 3,676 எண்ணிக்கையிலான 645.60 கி.மீ. நீளமுடைய சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.99 கோடி மதிப்பீட்டில் 169 கி.மீ. நீளத்தில் 897 தார்சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.20.69 கோடி மதிப்பீட்டில் 24 கி.மீ. நீளத்தில் 196 சிமெண்ட் கான்கிரீட் சாலைப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட மடிப்பாக்கம், ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மணப்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மடிப்பாக்கம் பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறத.
இதேபோல் கடந்த இரண்டு மாதங்களில் கொசஸ்தலையாறு வடிநில திட்ட நிதியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் 703 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர்வடிகால் பணிகளில் 119.57 கி.மீ. நீளத்துக்கு முடிக்கப்பட்டுள்ளன.
கோவளம் வடிநில திட்ட நிதியின் கீழ் கோவளம் வடிநிலப் பகுதியில் 160 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர்வடிகால் பணிகளில் 48 கி.மீ. நீளத்துக்கு முடிக்கப்பட்டுள்ளன.
மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 60 கி.மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.55 கி.மீ. நீளத்துக்கு முடிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 7.40 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 2.77 கி.மீ. நீளத்துக்கு முடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதியின் கீழ் 1 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 0.39 கி.மீ. நீளத்துக்கும் தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications