பிளஸ் 2 மாணவர்களே அடுத்து என்ன படிக்கலாம் என குழப்பமா.. நாளை வெளியாகிறது உயர்கல்வி வழிகாட்டி
சென்னை: 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது.
Recommended Video
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில தேவையான ஆலோசனைகள் வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில் இன்னர்வீல் கிளப் ஆப் மெட்ராஜ் உடன் இணைந்து தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் எதிர்கால வேலைவாய்ப்புகளையும் வழிகாட்டும் வகையில் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எப்படி ஜெயிக்கலாம் என்ற பயனுள்ள வழிகாட்டி நூலைத் தயாரித்துள்ளது.
மாணவர்கள் உயர்கல்வி குறித்து யோசிக்கும் போது மருத்துவம், பொறியியல், அறிவியல், பிகாம், சட்டம், விஷுவல் கம்யூனிகேஷன் என ஏராளமான படிப்புகள் குவிந்துள்ளன. இதில் மாணவர்கள் ஆர்வத்துக்கும் திறமைக்கும் சவாலாக உள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
மாணவர்களின் ஆர்வத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வல்லமை படைத்தது கல்லூரிகள். இந்த வழிகாட்டி புத்தகத்தில் கல்லூரி படிப்பையும் கல்லூரியையும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதில் ஆரம்பித்து ஒவ்வொரு படிப்பிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த உயர்கல்வி வழிகாட்டு இணையவழி புத்தகம் ஜூம் காணொலி மூலம் நாளை (செப்டம்பர் 2 ஆம் தேதி) மதியம் 12.30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உயர் கல்விக்கான ஆலோசனைகளை பெற ஆர்வமுள்ள மாணவர்கள் கீழ்க்கண்ட ஜூம் முகவரி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைந்து பயனடையலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Zoom Id: 850 3234 4381
Password: iwcm
இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் (கல்வி) ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். பொதுவாக பிளஸ் 2 முடித்தாலே மருத்துவம், என்ஜீனியர் என்ற படிப்புகளை தாண்டி நல்ல வேலைவாய்ப்பை தரும் பல படிப்புகள் குவிந்துள்ளன. இது குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு புரிதல் இல்லாத நிலையே இருக்கும்.
மேலும் ஒரு வீட்டில் உறவினர் என்ன படிக்கிறார்களோ அந்த படிப்பையே அந்த வீட்டில் பிளஸ் 2 முடித்தவரும் தேர்வு செய்யும் நிலையே இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். கொட்டி கிடக்கும் நல்ல படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து தங்கள் நிலையை உயர்த்தி கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications