சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை.. எப்போது தொடங்கப்படும்... மாநகராட்சி அதிகாரி விளக்கம்
சென்னை: சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் ரோப் கார் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குறை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். மெரினா கடற்கரை பகுதி என்பதால் காங்கிரீட் அடித்தளம் உள்ளிட்டவை அமைக்கப்படும். எனவே, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்பு தான் அனுமதி வழங்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னையில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்றால் அது மெரினா கடற்கரை தான். தினமும் மெரினா கடற்கரைக்கு பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதும். இந்தியாவின் மிகவும் நீளமான பீச் என்றால் அது மெரினா பீச் தான்.

மெரினா கடற்கரை என்பது வெறும் கடற்கரை மட்டுமல்ல.. அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதி ஆகியவை உள்ளன. அதேபோல் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இது ஒருபுறம் எனில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரையில் ரோப் கார் சேவையை கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் இதற்கான ஆலோசனைகளும், ஆய்வுப் பணிகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், முதற்கட்டமாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் ரோப் கார் திட்டப் பணிகளுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. இதையடுத்து, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அந்த அறிக்கையை சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது. இந்த ஆய்வின் போது, மெரினா கடற்கரையில் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு, எத்தனை ரோப் கார்களை இயக்க முடியும்? புவியியல் தன்மை, காற்றின் வேகம், தொழில்நுட்பங்கள், நிலப்பரப்பு உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி அறிக்கை தயாரித்து வழங்கி உள்ளது.
அடுத்தகட்டமாக மத்திய அரசின் கடலோர ஒழுங்குறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி காத்திருக்கிறது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் ரோப் கார் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குறை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்.
சென்னை மெரினா கடற்கரை பகுதி என்பதால் காங்கிரீட் அடித்தளம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.. எனவே, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்பு தான் அனுமதி வழங்கும். இதனால், அனுமதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம். ஒருவேளை விரைவில் அனுமதி கிடைத்தாலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஜூலை மாதத்திற்கு பின்பு தான் ரோப் கார் திட்டப் பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications